தஞ்சாவூரில் வீட்டின் ஓட்டை பிரித்து குழந்தைகளை தூக்கி சென்ற குரங்குகள் - நீரில் மூழ்கி ஒரு சிசு பலி
தஞ்சாவூரில் இரட்டை பெண் குழந்தைகளை குரங்கு தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளத்தில் மூழ்கி ஒரு குழந்தை பலியான நிலையில் ஒரு குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்: பிறந்து 8 நாட்களே ஆன 2 குழந்தைகளை குரங்கு ஒன்று தூக்கி சென்ற சம்பவம் தஞ்சாவூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூலை அனுமார் கோயில் குளத்தில் விழுந்ததில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. ஒரு குழந்தை இறந்த நிலையில் மற்றொரு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
Recommended Video
தஞ்சை மூலை அனுமார் கோயில் அருகே வசிப்பவர் ராஜா, இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி, இந்த தம்பதிக்கு கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு இரட்டை பெண் குழந்தை பிறந்தது
குழந்தைகளின் தாய் புவனேஸ்வரி இன்று இரண்டு பெண் குழந்தைகளையும் வீட்டின் தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு வேறு அறைக்கு சென்றிருந்தார். அப்போது குரங்கு ஒன்று வீட்டின் ஓட்டை பிரித்து வீட்டினுள் இறங்கி ஒரு பெண் குழந்தையை தூக்கிச் சென்றது. அதே குரங்கு மற்றொரு குழந்தையும் தூக்கிச் சென்றபோது தாய் புவனேஸ்வரி பார்த்து சத்தம் போட்டு அலறினார்.
அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக குரங்கினை விரட்டி குழந்தையை மீட்டனர். காணாமல் போன மற்றொரு பெண் குழந்தையை உறவினர்கள் தேடி வந்த நிலையில் குழந்தையானது குளத்தில் விழுந்து பலியானது தெரியவந்தது.
இதனை அடுத்து குளத்தில் கிடந்த குழந்தையை மீட்டு தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதனை செய்த அரசு மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பிறந்து எட்டு நாட்களே ஆன குழந்தையை குரங்கு தூக்கிச் சென்று குளத்தில் வீசிய சம்பவம் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகளை உடனே வனத்துறையினர் பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர், இதேபோன்று திருவையாறு அருகே மூதாட்டியிடம் 25 ஆயிரம் பணத்தை குரங்கு ஒன்று எடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.