"அதிகாரியாகவே இருந்தாலும் காதலிச்சா எதிர்ப்போம்"... போலீஸில் தஞ்சமடைந்த நகராட்சி என்ஜீனியர்
தாராபுரம்: தாராபுரத்தில் நகராட்சி அதிகாரி ஒருவர் காதலியுடன் போலீசில் தஞ்சம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரத்தை அடுத்துள்ள வீராட்சிமங்கலத்தை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். தாராபுரம் நகராட்சியில் எஞ்சினியரிங் பிரிவில் டெக்னீசியனாக வேலைபார்த்து வருகிறார்.
இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சர்மிளாபானு. பக்கத்து வீடு என்பதால் சர்மிளாபானுவும், நவநீதகிருஷ்ணனும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் அவர்களிடையே காதல் மலர்ந்தது.
இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இவர்களின் காதல் விவகாரம் அரசல் புரசலாக வெளியே தெரியவரவே சர்மிளாபானு வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இருப்பினும் நவநீதகிருஷ்ணன், சர்மிளாபானுவை கைபிடிப்பதில் உறுதியாக இருந்தார். அதன்படி காதல் ஜோடி கடந்த 26 ஆம் தேதி திருச்சி கிளம்பிச்சென்றது.
அங்கு இருவரும் நண்பர்கள் ஏற்பாட்டில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தங்கள் திருமணத்தை அங்குள்ள பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தனர். அதன் பின்னர் சென்னைக்கு சென்று விட்டனர்.
இதை அறிந்த சர்மிளாபானுவின் பெற்றோர் தாராபுரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் தங்களை தேடுவதை அறிந்ததும் நவநீதகிருஷ்ணன் தனது காதல் மனைவியுடன் தாராபுரம் போலீசில் தஞ்சமடைந்தார்.
அவர்கள் இருவரும் தாராபுரம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரும் மேஜர் என்பதால் சமரசமாகச் செல்ல அறிவுறுத்தப்பட்டது. அதன் பேரில் நவநீதகிருஷ்ணன் தனது காதல் மனைவியுடன் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார்.