'ஸ்மால் பஸ்'களில் இருப்பது சுற்றுச்சூழலைக் குறிக்கும் இலைதான்.. தமிழக அரசு
சென்னை: சென்னையில் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஸ்மால் பஸ்கள் எனப்படும் சிற்றுந்துகளில் இருப்பது சுற்றுச்சூழலைக் குறிக்கும் இலைதான் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த மனுவில்,
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, முதல்வராக பதவி ஏற்ற பின்னர், அவரது கட்சியின் இரட்டை இலை சின்னத்தை விளம்பரப்படுத்துவதற்காக அரசு பணம் பெரும் தொகை செலவு செய்யப்பட்டு வருகிறது.
மெரீனா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சமாதி ரூ.7.70 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது. இதன் நுழைவு வாயிலில் இரட்டை இலை சின்னம் மிகப்பெரிய அளவில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு பின்னர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் விற்பனை செய்யப்படும் குடிநீர் பாட்டில்களிலும் இரட்டை இலை பொறிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 23ஆம் தேதி சென்னை மற்றும் புறநகரில் 50 சிறிய பேருந்துகளின் சேவையை முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். இந்த பேருந்துகளிலும் இரட்டை இலை சின்னம் வரையப்பட்டுள்ளது.
அதாவது அறிவியல் ரீதியாக, இரண்டு அடுக்கு இரட்டை இலை சின்னம் சிறிய பேருந்துகளில் பொறிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் சின்னத்தை பிரபலப்படுத்தும் விதமாக, அரசு எந்திரங்களை முதல்வர் ஜெயலலிதா தவறாக பயன்படுத்தி வருகிறார்.
இரட்டை இலை சின்னத்தை பிரபலப்படுத்துவதற்காக, தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் வகையில் அடுத்த சில வாரங்களில் 610 புது சிறிய பேருந்துகளை இயக்குவதற்கு அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு கட்டுப்பாட்டில் உள்ள போக்குவரத்து துறைக்கு சொந்தமான இந்த பேருந்துகளில், இதுபோன்ற சின்னங்கள் வரைவது, கம்பெனி சட்டத்துக்கு எதிரானது.
இது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் என்பதால், இது தொடர்பாக கிரிமினல் வழக்கும் எங்களால் தொடர முடியும். தற்போது ஏற்காடு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், அரசின் இந்த செயல் தேர்தல் நடத்தை விதிக்கு எதிராக உள்ளது. எனவே, சிறிய பேருந்துகளில் ஆளும் கட்சி சின்னமான இரட்டை இலை அல்லது இரண்டு அடுக்கு இரட்டை இலை சின்னத்தை பொறிக்க தமிழக அரசுக்கு தடை விதிக்க வேண்டும்.
ஏற்காடு இடைத்தேர்தலை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், அரசு இயக்கும் பேருந்துகளில் கட்சி சின்னம் வரைவது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி குற்றமாகும்.
எனவே, முதல்வர் ஜெயலலிதா மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். கடந்த மாதம் தொடங்கி வைக்கப்பட்ட 50 சிறிய பேருந்துகளில் உள்ள இரட்டை இலை சின்னத்தை நீக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி அகர்வால் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் தலைமை அரசு வழக்கறிஞர் ஆஜராவதால் வழக்கைத் தள்ளி வைக்கக் கோரியிருந்தார். அதை ஏற்று இன்றைக்கு வழக்குத் தள்ளி வைக்கப்பட்டது.
இதையடுத்து இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அட்வகேட் ஜெனரல் நேரில் ஆஜராகி விளக்கத்தை சமர்ப்பித்தார். அவர் கூறுகையில், சிற்றுந்துகளில் வரையப்பட்டுள்ளது இரட்டை இலை சின்னம் அல்ல. மாசுகட்டுப்பாடு, சுற்றுச்சுழலை குறிக்கும் வகையில் சிற்றுந்துகளில் இலைகள் இடம்பெற்றுள்ளன என்றார்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர், போக்குவரத்து செயலாளர் ஆகியோரை 2 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை நவம்பர்26ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.