சென்னை சில்க்ஸ் அருகே உள்ள கட்டடங்களுக்கு பாதிப்பில்லை.. கலெக்டர் அன்புச்செல்வன்!
சென்னை சில்க்ஸ அருகே உள்ள கட்டடங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னை சில்க்ஸ் கட்டடம் இரண்டாவது நாளாக இன்றும் எரிந்து வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் ஆய்வு செய்த கலெக்டர் சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் அருகே உள்ள கட்டடங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் நேற்று காலை 4 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல தீவிரமடைந்த தீ விபத்து 7 மாடிகளையும் ஆட்கொண்டது.
கொழுந்து விட்டு எரிந்த தீயால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து புகை மண்டலமாக காணப்பட்டது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
4 தளங்கள் இடிந்தன
நேற்றுக்காலை முதலே 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். வெப்பம் தாங்க முடியாமல் கட்டடத்தின் 4 தளங்கள் இடிந்து விழுந்துள்ளன.
அக்கம்பக்கத்தினர் பீதி
கட்டடத்தில் தொடர்ந்து தீ கொழுந்துவிட்டு எரிவதால் அருகில் உள்ள கடை வணிகர்கள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இரண்டாவது நாளாக தீ கட்டுக்குள் வராததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கலெக்டர் ஆய்வு
இந்நிலையில் இரண்டாவது நாளாக நீடிக்கும் தீ விபத்தை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் இன்று ஆய்வு செய்தார். இடிந்து விழுந்த பகுதியிலும் சென்னை கலெக்டர் அன்புச்செல்வன் ஆய்வு மேற்கொண்டார்.
எந்த பாதிப்பும் இல்லை
ஆய்வுக்கு பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இடிந்து விழுந்து கட்டடத்திற்கு அருகே உள்ள கட்டடங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அவர் கூறினார்.
ஆலோசனைக்குப் பின் இடிப்பு?
இடிந்த நிலையில் உள்ள மீதி கட்டடத்தை இடிப்பது குறித்து பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தியபின் முடிவு எடுக்கப்படும் என்றும் அன்புச்செல்வன் கூறினார். நேற்று முதல் எரிந்து வருவதால் கட்டடத்தின் உறுதி தன்மை பாதிக்கப்பட்டிருக்கும் சூழல் உருவாகியுள்ளதால் அந்தக் கட்டடம் இடிக்கப்படலாம் எனத் தெரிகிறது.