ராமேஸ்வரம் பாம்பன் துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
ராமேஸ்வரம் பாம்பன் துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Recommended Video
ராமேஸ்வரம்: பாம்பன் துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன்காரணமாகதமிழகத்தின் தென் மாவட்டங்களின் சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.
கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம் தூத்துக்குடி, கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் சின்னம் காரணமாக ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடியில் பலத்த சூறாவளி காற்றுடன் கடலும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.
ராமநாதபுரத்தில் மழை
இதனால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று காலை முதல் ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.
கடல் கொந்தளிப்பு
அப்போது கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தன. ராமேஸ்வரம் பகுதியில் நேற்று காலை முதல் தொடர்ந்து பலத்த காற்று வீசி வருகிறது.
கரையில் படகுகள்
ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 600 விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டு இருந்தன.
நீடிக்கும் காற்றழுத்தம்
இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று அதே பகுதியில் நீடித்து வருகிறது. ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடியில் தொடர்ந்து பலத்த காற்று வீசி வருவதோடு கடலும் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
3ஆம் எண் புயல் எச்சரிக்கை
இதனால் மீனவர்கள் 4-வது நாளாக இன்றும் கடலுக்கு செல்லவில்லை. இந்நிலையில் பாம்பன் துறைமுகத்தில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.