ஆஹா.. இவரல்லவோ உதாரண புருஷர்.. 80 வயதிலும் மனைவியின் பிரிவால் வாடும் கணவர்!
மனைவியை தன்னுடன் வாழ வைக்குமாறு 80 வயது முதியவர் மனு அளித்துள்ளார்.
பண்ருட்டி: இப்போதெல்லாம் 50 வருடங்கள் ஒன்றாக சேர்ந்து வாழும் தம்பதிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. சிலர் திருமணமான கொஞ்சநாளிலேயே பிச்சிக்கிட்டும், சிலர் விவாகரத்து பெற்றும், சிலர் சண்டை சச்சரவோடு வாழ்க்கையை நகர்த்திக் கொண்டும் செல்கின்றனர். ஆனால் வெகுசில தம்பதிகளே ஆத்மார்த்தமாக, உளப்பூர்வமாக, தாம்பத்யம் என்னும் இனிய சிறைக்குள் அடைப்பட்டு கருத்தொற்றுமையுடனும், ஆழ்மனதின் பாசத்துடனும் பொன்விழா கண்டு நிற்கிறார்கள்.
அந்த வரிசையில் சூழ்நிலை காரணமாக பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்க கோரி கணவர் ஒருவர் காவல்நிலைய படிக்கட்டுகளை ஏறி இறங்கி கொண்டிருக்கிறார். மனைவிக்கு வயது 70. கணவனின் வயது 80.
பண்ருட்டி அருகே உள்ள ஊர் பெரியகாட்டுப்பாளையம். இங்கு வசித்து வருபவர் கலியபெருமாள். கூலி தொழிலாளி. இவர்தான் கோரிக்கை மனுவுடன் வலம் வந்துகொண்டிருப்பவர். இவரது மனைவி சரோஜா. இவர்களுக்கு மூன்று மகள்கள். மூன்று பேருக்குமே திருமணம் ஆகிவிட்டது. இதில் கடைசி பெண் பெயர் அஞ்சலை. சில ஆண்டுகளுக்கு முன் சரோஜா, வடலூரில் வசித்து வரும் கடைசி மகளை பார்க்க சென்றார். அவருக்கு உதவியாக அங்கேயே இருந்துவிட்டார்.
இதனால் மகள் வீட்டுக்கு சென்ற கலியபெருமாள், மனைவியை தன்னுடன் வந்துவிடுமாறு அழைத்தார். ஆனால் கடைசி மகள் என்பதால் அவரை விட்டு பிரிய மனமில்லாமல் சரோஜா மறுத்தார். "வயதான காலத்தில் என்னால் இருக்கமுடியவில்லை, நீ சமைத்த உணவைதான் நான் சாப்பிட வேண்டும், கூலி வேலையும் செய்துகொண்டு தனியாகவும் இருக்க முடியவில்லை" என்று அழைத்தார். ஆனாலும் மகளின் நிலைமையை சமாளிக்க சரோஜாவால் கணவன் கூப்பிட்டதும் செல்ல முடியவில்லை.
இதனால் வாடிய முகத்துடன் காணப்பட்ட கலியபெருமாள், காடாம்புலியூர் காவல்நிலையத்தில் தன் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி புகார் அளித்தார். ஆனால் அதன் மீது ஒரு நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை. ஆனாலும் கலியபெருமாள் இவ்விஷயத்தை கைவிடவில்லையே! அடுத்ததாக காவல் கண்காணிப்பாளரிடம் சென்றார். பின்னர், மாவட்ட ஆட்சியரிடமும் சென்று "என் மனைவியை எப்படியாவது என்னுடன் சேர்த்து வையுங்கள்" என்றார்.
நேற்றும் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மனு கொடுக்க வந்தார். இன்னமும் தன் முயற்சியில் மனம் தளராத 80 வயது கலியபெருமாள், தன் 70 வயது மனைவி வந்துவிடமாட்டாளா என்று காத்துக் கொண்டே இருக்கிறார். இப்போதெல்லாம் சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் மனைவி மீது எறிந்துவிழும் சில இளம் கணவன்மார்களுக்கும், ஒன்னும் இல்லாததுக்கெல்லாம் கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு போய் உட்கார்ந்துகொள்ளும் சில இளம் மனைவிமார்களுக்கும் நடுவே கலியபெருமாள் வயதில் மட்டுமல்ல.. அன்பினாலும் உயர்ந்தே நிற்கிறார்.