அதே தநா.39 பைக்.. போலீசுக்கு வந்த ரகசிய தகவல்.. துரத்தி துரத்தி பிடிக்கப்பட்ட புல்லட் நாகராஜன்!
பிரபல ரவுடி புல்லட் நாகராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
தேனி: பிரபல ரவுடி புல்லட் நாகராஜன் போலீசால் துரத்தி செல்லப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கைது செய்யப்பட்ட சம்பவம் மிகவும் சுவாரசியமாக அரங்கேறி உள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் கிராமத்தை சேர்ந்த பிரபல ரவுடி புல்லட் நாகராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சில நாட்களுக்கு முன் இரண்டு போலீசாரை வாட்ஸ் ஆப் மூலம் மிரட்டி இருந்தார்.
இவர் போலீசாரை மிரட்டிய ஆடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. இந்த நிலையில் இவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே 71 வழக்குகள் உள்ளது.
வசனம் பேசியவர்
புல்லட் நாகராஜ் வெளியிட்ட ஆடியோக்களில் மிக முக்கியமான ஆடியோ என்றால், அது கடைசியாக வெளியிட்ட ஆடியோதான். அதில்தான் ''போலீசால் என்னை நெருங்க முடியாது, நானே நினைத்தால் தான் என்னை கைது செய்ய முடியும்'' என்று மிகவும் திமிராக பேசி இருந்தார். இந்த நிலையில்தான் தற்போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காக பெரிய அளவில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்த வசனம்
இவரை கைது செய்வதற்காக போலீஸ், ஏற்கனவே பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் கிராமத்தில் உள்ள அவர் வீட்டுக்கு வெளியே மறைவாக சில போலீஸ் அதிகாரிகளை நிறுத்தி வைத்து இருந்தது. ஆனால் புல்லட் நாகராஜன் கடைசி வரை தேனியில் உள்ள அவரது வீட்டிற்கு வரவே இல்லை என்று கூறப்படுகிறது. மாறாக அவரது வீட்டில் ''என் வீட்டு பக்கம் யாரும் வராதீர்கள். வந்தால் நான் மனிதனாக இருக்க மாட்டேன். வீட்டை சுற்றி கேமரா இருக்கிறது. என்னை கோர்ட்டில் வந்து பாருங்கள்'' என்று போஸ்டர் மட்டும் ஒட்டியுள்ளார்.
தீவிர தேடுதல்
இந்த நிலையில்தான் அவரை தீவிரமாக போலீசார் தேடி இருக்கிறார்கள். போலீசுக்கு மிரட்டல் விடுத்து ஐந்து நாட்கள் ஆகியும், கைது செய்ய முடியாததால், போலீஸ் தேடுதலை தீவிரபடுத்தியது. தேனியில் நாகராஜன் செல்லும் இடங்களுக்கு எல்லாம் போலீஸ் மப்டியில் அனுப்பப்பட்டது. எங்கெல்லாம் அவர் செல்ல வாய்ப்புள்ளது என்று விசாரிக்கப்பட்டது.
ரகசியமான தகவல்
அதன்பின்தான், நாகராஜன் பெரிய குளத்தில் சுற்றி வருகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. நாகராஜன் மூலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர்தான் போலீசுக்கு இந்த தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் எங்கே தங்கி இருக்கிறார் என்ற விவரம் போலீசுக்கு தெரியாமல் இருந்துள்ளது.
காட்டிக் கொடுத்த பைக்
தநா 39 பிசி 8472 என்ற பைக் பெரிய குளத்தில் தென்படுகிறதா என்று போலீஸ் தேடி இருக்கிறது. அதுதான் நாகராஜனின் சொந்த பைக் ஆகும். ஊரை விட்டு ஓடியவர் பைக்கை மாற்றாமல் அதே பைக்கில் பெரிய குளத்தில் சுற்றி இருக்கிறார். இந்த நிலையில் இதை வைத்துதான் போலீஸ் அவரை கண்டுபிடித்தது.
துரத்தி
vகாலையில் போலீசுக்கு வந்த தகவலின் அடிப்படையில் பெரியகுளத்தில் மீண்டும் நாகராஜனை தேடி சென்று இருக்கிறார்கள். அப்போதுதான், தென்கரையில் இருசக்கர வாகனத்தில் சென்ற புல்லட் நாகராஜை கண்டுபிடித்துள்ளனர். இதனால் அவரை போலீஸ் ஜீப்பில் விரட்டிச் சென்று துரத்தி இருக்கிறார்கள். அதே பகுதியின் தெரு முனையில் அவரை வளைத்து பிடித்துள்ளார் பெரியகுளம் டிஎஸ்பி. தற்போது இவர் விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.