திருப்பூரில் வாகன சோதனையில் பிடிபட்ட ரூ570 கோடி வங்கிப் பணம்...
கோவை: திருப்பூர் அருகே வாகன சோதனையில் பிடிபட்ட ரூ 570 கோடி பணம் பாரத ஸ்டேட் வங்கியின் விசாகப்பட்டினம் கிளைக்குச் செல்ல வேண்டியது என்றும், உரிய ஆவணங்கள் கொடுத்த பிறகும் விட மறுப்பதாகவும் ஆந்திர போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருப்பூரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்துடன் 3 கண்டெய்னர் லாரிகளை பறிமுதல் செய்தனர். அந்த கண்டெய்னர்களில், 570 கோடி ரூபாய் இருந்ததாக தகவல் வெளியானது.
ஆனால் கொடுக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் ரூ 195 கோடி ரூபாய் இருப்பதாக தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
இரவு 1 மணிக்கு 3 கண்டெய்னர் லாரிகளும், அதற்கு முன்னும் பின்னும் 3 இன்னோவா கார்களும் என மொத்தம் 6 வாகனங்கள் அடுத்தடுத்து வந்துள்ளன.
சந்தேகப்பட்ட பறக்கும் படையினர் வாகனங்களை நிறுத்தி விசாரித்தபோது, கண்டெய்னர்கள் முழுக்க பணம் இருப்பதாகவும், அந்த பணம் கோவை பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து விசாகப்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கிக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கண்டெய்னர் வாகனங்களிலும், இன்னோவா கார்களிலும் தலா ஒரு ஆந்திர மாநில போலீசாரும் இருந்துள்ளனர். ஆனால் அந்த போலீசார், காவல்துறையின் யூனிபார்ம் அணிந்திருக்கவில்லை. ஆந்திரா மாநில எல்லைக்குச் சென்ற பின் யூனிபார்ம் அணிந்து கொள்ள முடிவு செய்திருந்தார்களாம்.
இந்த விவரங்கள் அனைத்தும் சொன்ன பிறகும், 3 கண்டெய்னர் லாரிகளையும் பறிமுதல் செய்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றுள்ளனர் பறக்கும் படையினர்.
இந்த கண்டெய்னர் லாரிகளில் மொத்தம் 570 கோடி ரூபாய் இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், பணம் கொண்டு செல்லப்பட்ட வாகனத்தில் இருந்த ஆவணங்களின் அடிப்படையில், 195 கோடி ரூபாய் இருப்பதாக தேர்தல் ஆணையர் லக்கானி தெரிவித்துள்ளார். இதையடுத்து, ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் இந்த பண பரிமாற்றம் குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கன்டெய்னர்களுக்கு பாதுகாப்பாக மத்திய பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக கண்டெய்னர் லாரிகளுடன் வந்த ஆந்திர போலீசார் கூறுகையில், "விசாகப்பட்டினம் வங்கிக்கு கொண்டு செல்லும் பணத்தைத்தான் அதிகாரிகள் பிடித்துள்ளனர். உரிய ஆவணங்கள் இருந்தும் பணத்தைவிட அவர்கள் மறுக்கின்றனர். மேலும், வங்கி அதிகாரிகள் வந்து இதனை உறுதிப்படுத்திய பின் தான் விடுவோம் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள்," என்றனர்.