இறைச்சிக்காக மாடுகளை விற்க ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை தடையில்லை.. ஹைகோர்ட் கிளை அறிவிப்பு!
இறைச்சிக்காக மாடுகளை விற்க ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை தடையில்லை என ஹைகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது.
மதுரை: இறைச்சிக்காக மாடுகளை விற்க கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவு மீதான தடை ஆகஸ்ட் 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இறைச்சிக்காக கால்நடைகளை விற்கக்கூடாது என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இதற்கு பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான எதிர்ப்பு எழுந்தது.
கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநில அரசுகள் மத்திய அரசின் தடையை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றின. இந்நிலையில் மாட்டிறைச்சி மீதான மத்திய அரசின் தடையை எதிர்த்து வழக்கறிஞர் செல்வகோமதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
மீண்டும் விசாரணை
அதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை மாட்டிறைச்சி மீதான மத்திய அரசின் தடைக்கு எதிராக இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மாட்டிறைச்சி விவகாரத்தில் திருத்தம்
அப்போது மாட்டிறைச்சி விவகாரத்தில் திருத்தங்களை கொண்டு வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். திருத்தங்கள் கொண்டு வரப்படும் வரை தடையை நீட்டிக்க வேண்டும் என மனுதாரர்கள் கோரியிருந்தனர்.
இடைக்கால தடை நீட்டிப்பு
இதையடுத்து இறைச்சிக்காக மாடுகளை விற்க கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவு மீதான தடை ஆகஸ்ட் 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 22ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
மேலும் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 22ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் வரும் 22ஆம் தேதி வரை காநடைகளை விற்க தடையில்லை என்பது உறுதியாகியுள்ளது.