அப்படியே தட்டில் இருந்ததை கொடுத்தார்.. நிற்காமல் போய் விட்டார்.. நெகிழ வைத்த பிச்சைக்காரர்!
தட்டில் உள்ளதை புயல் நிதியாக கொடுத்தார் பிச்சைக்காரர் ஒருவர்.
சிங்கம்புணரி: அவர் என்ன நினைச்சாரோ தெரியவில்லை.. அப்படியே தட்டில் இருந்ததை கொடுத்திட்டு திரும்பி விட்டார்!!
கஜா புயல் பாதிப்பை அடுத்து எல்லோருமே தங்களால் ஆன உதவிகளை செய்து வருகிறார்கள். நிறுவனங்கள் ரீதியாகவும், தனியார் அமைப்புகள் மூலமாகவும், இயக்கங்கள் வாயிலாகவும் என உதவிக்கரம் நீண்டு வருகிறது.
இதில் தனிநபர்களும் விதிவிலக்கல்ல. முடிந்தவர்கள் தங்கள் பகுதிகளில் பொருட்களை திரட்டி தருகிறார்கள், முடியாதவர்கள் நேரிலே போய் யாருக்கு என்ன உதவியோ செய்து வருகிறார்கள்.
நிவாரண பொருட்கள்
இப்படித்தான் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள பொதுமக்கள் நிவாரண பொருட்களை திரட்டி கொண்டிருந்தார்கள். ஒரு பக்கம் வியாபாரிகள், இன்னொரு பக்கம் தனியார் அமைப்புகள் என எல்லோருமே நிவாரண பொருளை திரட்டும் பணியில் இருந்தார்கள். அப்போது அந்த வழியாக ஒரு பிச்சைக்காரர் வந்தார்.
தட்டுடன் வந்தார்
அவர் கையில் தட்டு எடுத்து கொண்டு அங்கிருந்தோரிடம் பிச்சை எடுக்க வந்தார். ஏற்கனவே அவரது தட்டில் கொஞ்சம் சில்லறையும், சில ரூபாய் நோட்டுகளும் இருந்தன. நிவாரண பணிக்காக மக்கள் ஒவ்வொருவராக துணி, பால், மருந்து, அரிசி, பணம் என தந்துகொண்டிருந்தார்கள். ஒருவர் ஒரு பெரிய பையை வைத்து கொண்டு அந்த பொருட்களை வாங்கி வாங்கி அதனுள் போட்டு கொண்டிருந்தார்.
தடுத்து நிறுத்தினார்
இதை பார்த்த அந்த பிச்சைக்காரர் யாரிடமும் எதுவும் பேசவில்லை, தனக்கான பிச்சையையும் வாய் திறந்து கேட்கவில்லை. அந்த பை வைத்து கொண்டிருந்தவரை தடுத்து நிறுத்தினார். பிச்சைக்காரர் தன்னை திடீரென நிறுத்தியதும், அவருக்கும் ஒன்றும் புரியவில்லை.
அப்படியே கொட்டினார்
தனது தட்டில் இருந்த சில்லரை, ரூபாய் நோட்டுகளை அப்படியே அந்த பையில் கொட்டினார். அதன்பிறகும் அங்கு அவர் நிற்கவில்லை, பிச்சையும் கேட்கவில்லை. வேகவேகமாக அங்கிருந்து நடந்து சென்று விட்டார். நிவாரண பொருட்களோடு வந்து நின்ற மக்கள் இதனை பார்த்து கண்கலங்கியபடியே நின்றார்கள்.