உலகின் தலைசிறந்த மருத்துவர்கள் தமிழர்கள்... அவர்கள் நீட் படித்தவர்களா 'ஹிந்தியர்களே'!
-எஸ் ஷங்கர்
மாணவி அனிதாவின் மரணம் தமிழகத்தில் சாதி, மத உணர்வுகளுக்கு அப்பால், ஒவ்வொரு தமிழனையும் கண்ணீர் சிந்த வைத்திருக்கிறது. ஹிந்தியர்களுக்கு ஒருவேளை நீட் பித்தால் மனம் மரத்துப் போயிருக்கலாம்.
ஆனால் நீட், கோட் என எதுவுமே இல்லாமல் உலகின் சிறந்த மருத்துவர்களாக தலைநிமிர்ந்து நிற்கும் தமிழர்களால் இந்த தற்கொலையை வெறும் இரங்கலோடு கடந்து போக முடியாது.
தமிழனின் மருத்துவத் திறமை பல ஆயிரம் ஆண்டு பாரம்பர்யம் கொண்டது. கற்பனையோ என யோசித்த போகரைப் போன்ற சித்தர்களின் மருத்துவம், நவீன விஞ்ஞானத்துக்கு முன்பே அறுவைச் சிகிச்சை செய்யும் அளவுக்குத் தேர்ச்சிப் பெற்றவர்கள் தமிழர்கள். இன்றைக்கு ஜெர்மனியும் பிரிட்டனும் தமிழரின் மருத்துவ நிபுணத்துவத்தை மேலும் மேலும் ஆராய்ந்து கொண்டிருக்கின்றன.
இது பழங்கதைப் பெருமையல்ல. வழிவழியாக, பரம்பரை பரம்பரையாக தமிழரின் உதிரத்தில் உள்ள குணம். நிபுணத்துவம். இதற்கு நீட் தேவைப்பட்டதில்லை எப்போதுமே.
மருத்துவம் பயில இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் நுழைவுத் தேர்வு போன்ற ஏதாவது ஒரு தடைக் கல் இருந்தாலும், தமிழகத்தை அது 2016 வரை பாதித்ததில்லை.
1984 முதல் தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வந்த நுழைவுத் தேர்வு முறை (TNPCEE) ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் பாடங்களில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில், ஒற்றைச் சாளர முறையில் கடந்த 2006 ஆண்டு முதல் படிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. இதற்கு முக்கிய காரணம், ஒடுக்கப்பட்ட இனத்தின் மாணவ மாணவிகள் அதிக வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்பதற்காக.
இதற்கு உலை வைக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பத்திலிருந்தே ஆதிக்க சக்திகள் பெரும் பிரயத்தனப்பட்டன. அவர்களின் பிரயத்தனங்களை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் அரசு கூட அவ்வளவு அக்கறை காட்டவில்லை (நீட் தேர்வினைக் கொண்டு வந்ததே காங்கிரஸ் அரசு என்றாலும்). மாநில அரசுகளின் தனித்துவத்தை ஓரளவு மதித்து, இந்த நுழைவுத் தேர்வை நடத்தியது. அதாவது மாநில அரசுகளின் 85 விழுக்காடு மருத்துவப் படிப்பு இடங்களுக்கான தேர்வு முறையை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம். ஆனால் மத்திய அரசின் 15 விழுக்காடு இடங்களுக்கு நீட் கட்டாயம் என்றாக்கினார்கள். ஆனால் படிப்பு முறை, மாணவர் உளவியல், மாநில அரசின் உரிமை என எதையுமே கண்டு கொள்ளாத மோடி அரசு, வலுக்காட்டாயமாக நீட் தேர்வை அனைத்தி மாநிலங்களுக்கும் கட்டாயமாக்கிவிட்டது.
எத்தனை எளிய மாணவ மாணவியர்களின் கனவுகளின் மேல் விழுந்த அடி இது!
தமிழகத்தின் தலை சிறந்த மருத்துவ நிபுணர்கள் யாரும் நீட் தேர்வு எழுதியவர்கள் இல்லை. TNPCEE தேர்வு ரத்தான 2006-ம் ஆண்டுக்குப் பிறகு மருத்துவம் படித்து தேர்ச்சி பெற்ற இளம் மருத்துவர்கள் எத்தனை ஆயிரம் பேர்... அவர்களில் யாருடைய திறமையையாவது இந்த பாஜக அரசு சந்தேகப்பட முடியுமா?
தனது பாடத் திட்டத்தின்படி படித்து உயர் மதிப்பெண் பெற்று, தகுதியாக வந்து நிற்கும் தன் மாணவர்களை எந்த அடிப்படையில் மருத்துவம் படிக்கச் சேர்க்க வேண்டும் எனும் உரிமை, அதிகாரம், தகுதி எல்லாமே அந்த மாநில அரசுக்குத்தான் உள்ளது. திடுதிப்பென்று நான்தான் அதை முடிவு செய்வேன் என்று சொல்ல மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் உரிமையும் இல்லை. அரசியல் சட்டப்படி என்று சொல்லிக் கொண்டு மூக்கை நீட்டலாமே தவிர, அது நியாயமாகாது.
மற்ற மாநிலங்கள் ஏற்றுக் கொண்டன என்ற ஒரே காரணத்துக்காக நீட் தேர்வை தமிழகமும் ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பணமதிப்பிழப்பில் இந்த பாஜக அரசு எப்படியொரு பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளதோ, அதைவிட பெரும் தோல்வியை இந்த நீட் திணிப்பில் பெறும் நாள் தூரத்தில் இல்லை. அனிதாவின் ஆன்மா இந்த கையாலாகாத, சர்வாதிகார அரசுகளை நிச்சயம் தண்டிக்காமல் போகாது!