இனி குடித்தால் பிள்ளைகளுடன் எங்காவது போய் விடுவேன்.. மனைவி மிரட்டல்.. கணவர் தூக்கிட்டு தற்கொலை
கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Recommended Video
மேட்டுப்பாளையம்: தினமும் குடித்துவிட்டு வந்தால் பிள்ளைகளுடன் எங்காவது போய் விடுவதாக மனைவி கண்டித்ததால் மனமுடைந்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அன்னூர் சாலையில் ஜீவானந்தபுரம் பகுதியில் வசித்து வருபவர் வடிவேல். இவருக்கு 38 வயதான இவர் கட்டிட தொழிலை செய்து வந்தார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். காலையிலிருந்து பொழுது முடியும்வரை கட்டிட வேலையில் கடுமையாக உழைத்து வந்தாலும், சாயங்காலம் ஆகிவிட்டால் மது அருந்தாமல் இவரால் இருக்க முடியாமல் போய்விடுகிறது.
தினமும் மது அருந்துவதையே பழக்கமாக வைத்திருந்திருக்கிறார் வடிவேல். வீட்டுக்கு குடித்துவிட்டு வரும்போதெல்லாம் அன்று மனைவியுடன் தகராறுதான். பல முறை தன் கணவரிடம் குடிக்க வேண்டாம் என்று ராஜேஸ்வரி எடுத்து சொல்லியும், அப்போதைக்கு சரி என்று சொல்லும் வடிவேல் இரவு வரும்போது மதுபோதையுடனே வீட்டுக்கு வருவாராம். மீண்டும் தகராறு - வாக்குவாதம்.
இதேபோல சம்பவத்தன்றும் குடித்துவிட்ட வடிவேலுவை கண்டித்துள்ளார் ராஜேஸ்வரி. ஆனால், அதனை கொஞ்சமும் காதிலேயே வாங்கி கொள்ளாமல் தூங்க சென்றுவிட்டார் வடிவேல். மறுநாள் காலையில் தூங்கி கொண்டிருந்த வடிவேலுவை எழுப்பிய ராஜேஸ்வரி, எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தினமும் இப்படி குடித்துவிட்டுத்தான் வருகிறீர்கள், இனியும் இப்படி குடித்தால் பிள்ளைகளை கூட்டிக் கொண்டு எங்காவது சென்றுவிடுவேன் என்று சொல்லிவிட்டு, அருகிலுள்ள கோயிலுக்கு சென்றுவிட்டார்.
இதனால் வெறுப்பான வடிவேல், அறையினுள் இருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். நீண்ட நேரம் அக்கம்பக்கத்திலுள்ளோர் ராஜேஸ்வரியை பார்க்க வீட்டிற்குள் வந்தனர். அப்போது வடிவேல் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வடிவேலு ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டு விட்டது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.