சென்னை சேப்பாக்கம் வாலாஜா சாலையில் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சாலைமறியல்.. போக்குவரத்து பாதிப்பு!
சென்னை சேப்பாக்கம் வாலாஜா சாலையில் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Recommended Video
சென்னை: சேப்பாக்கம் வாலாஜா சாலையில் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கால் டாக்ஸிகளுக்கான வாடகை கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வாடகை கார் ஓட்டுநர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட கார் ஓட்டுநர்கள் அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். ஆட்டோக்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பது போன்று கார்களுக்கும் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கால் டாக்ஸி ஓட்டுநர்களின் பிரதிநிதிகள் சென்னை எழிலகத்தில் போக்குவரத்து ஆணையரை சந்தித்து தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆனால் போக்குவரத்து ஆணையர் கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால் சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்திய கார் ஒட்டுநர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அப்போது வாலாஜா சாலையில் சென்ற கால் டாக்சிகளை வழிமறித்து சக ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக்சியை நிறுத்திவிட்டு தங்களோடு இணைந்து போராட்டத்தில் ஈடுபடுமாறு கூறினர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த கால் டாக்ஸிகளின் கண்ணாடியை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையின் பிரதான சாலைகளில் ஒன்றான சேப்பாக்கம் வாலாஜாசாலையில் நடைபெறும் இந்த போராட்டத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.