குற்றச்சாட்டுகள் கற்பனையானவை… வழக்கை சட்டரீதியாக சந்திப்பேன்: தயாநிதிமாறன்
சென்னை: தம்மீது கற்பனையாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், தொலைபேசி இணைப்புகள் தொடர்பான வழக்கை சட்டரீதியாக சந்திக்க தாம் தயாராக இருப்பதாகவும் தயாநிதி மாறன் கூறியுள்ளார்
சட்டவிரோதமாக பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறனின் கூடுதல் தனிச் செயலராக இருந்த வி.கவுதமன், சன் டி.வி.யின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், சன் டி.வி.யின் எலக்ட்ரீஷியன் கே.எஸ்.ரவி ஆகியோரை கைது செய்தனர்.
கைதான மூவரும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படுகிறார். இவர்கள் மூன்று பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர். பின்னர் சிபிஐ விசாரணைக்காக இவர்களை காவலில் எடுக்கும் எனத் தெரிகிறது.
தயாநிதிமாறன் மறுப்பு
இந்த நிலையில் தம்மீதான குற்றச்சாட்டுக்களை தயாநிதிமாறன் மறுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமது உதவியாளர் உட்பட மூவரை கைது செய்திருப்பது குறித்து விளக்கமளித்தார்
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வழக்கு இது. விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அரசியல் உள்நோக்கத்துடன் இப்போது திடீரென்று கைது செய்துள்ளனர்.
கடந்த 18 மாதங்களாக 10 முறைக்கு மேல் இவர்கள் மூவரும் விசாரணை செய்யப்பட்டுள்ளனர். அப்போது எல்லாம் விட்டுவிட்டு நேற்று இரவு திடீரென கைது செய்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
சன்டிவி யாருடையது?
தனக்கும் சன்டிவிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அவர்கள் சொல்வது போல முறைகேடான தொலைபேசி இணைப்புகள் தமது வீட்டில் இல்லை என்றும் தயாநிதிமாறன் தெரிவித்தார்.
சிவில் வழக்கு
அமைச்சர் என்ற முறையிலான பணிகளையே தான் செய்தேன். தொலைபேசி இணைப்புக்கான கூடுதல் கட்டணத்தை செலுத்தாமல் இருப்பது சிவில் வழக்கு.கூடுதல் கட்டணம் என்றால் அதை செலுத்த வாய்ப்பு தரலாம். ஒரு கோடி ரூபாய் என்றால் நான் கட்ட மாட்டேனா? அதை விடுத்து சிவில் குற்றச்சாட்டை, கிரிமினல் குற்றச்சாட்டாக மாற்றுவது ஏன் என்றும் தயாநிதிமாறன் தெரிவித்தார்.
இப்போதும் இருக்கிறது
அதே தொலைபேசி இணைப்புதான் இப்போது தன்னுடைய வீட்டில் உள்ளது. தாம் தவறு எதுவும் செய்யவில்லை. சன்டிவியை உள்ளே இணைத்தால்தான் இதை கிரிமினல் வழக்காக மாற்ற முடியும் என்று சன்டிவியுடன் இணைப்பை ஏற்படுத்துகின்றனர்.
மூன்றாம்தர நடவடிக்கை
தனது உதவியாளர் உட்பட 3 பேரையும் தாக்கி, அடித்து, துன்புறுத்தி தமக்கு எதிராக வாக்குமூலம் வாங்க சி.பி.ஐ முயற்சிக்கிறது. தமக்கு எதிராக வாக்குமூலம் அளித்துவிட்டால் அவர்களை விட்டுவிடுவதாகவும் சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யாரை திருப்திபடுத்த
மூவரின் கைது நடவடிக்கைக்கு ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ஒருவரே முக்கிய காரணம் என சந்தேகிப்பதாக தயாநிதி மாறன் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள அந்த அறிவுஜீவி ஆர்.எஸ்.எஸ் பிரமுகரை திருப்திபடுத்தவே சி.பி.ஐ நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பேசிய அவர் தம்மை பிரபலபடுத்திக் கொள்ள ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் முயற்சிப்பதாகவும் புகார் கூறியுள்ளார்.
வளரவிடமாட்டார்கள்
திராவிட இயக்கத்தில் யார் புகழ் பெற்றாலும் ஆர்.எஸ்.எஸ்.க்கு பிடிக்காது எனவும் குறிப்பிட்டார். தமிழகத்திலோ, இந்தியாவிலோ தங்களை தவிர வேறு யாரும் அரசியலில் செயல்படக் கூடாது என்று நினைப்பதும், அப்படி செயல்பட்டால் முளையிலேயே கிள்ளி எறிய முற்படுவதும் தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வேலை என்றும் புகார் தெரிவித்தார்.
சட்டரீதியாக சந்திப்பேன்
தொலைபேசி இணைப்புகள் தொடர்பான வழக்கை சட்டரீதியாக சந்திக்க தாம் தயாராக இருப்பதாகவும் தயாநிதி மாறன் கூறியுள்ளார். தாம் அமைச்சராக இருந்த போதும், தற்போதும் தம் வீட்டில் ஒரு இணைப்பு மட்டுமே இருப்பதாகவும் கூறியுள்ளார்.
சி.பி.ஐக்கு கடிதம்
மூவரின் கைது நடவடிக்கைக்கு அரசியலும் காரணமாக இருக்கலாம் எனவும் தயாநிதி மாறன் சந்தேகம் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், கைது செய்யப்பட்டுள்ள மூவரின் மனைவியரும் மனித உரிமை ஆணையருக்கும், உச்சநீதிமன்ற நீதிபதிக்கும் கடிதம் எழுத உள்ளதாக தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகளுக்கு தாமும் கடிதம் எழுத உள்ளதாகவும் அவர் கூறினார்.