செல்போனில் பேசியது நிர்மலா தேவி குரல்தான்: தடயவியல் சோதனையில் உறுதியானது!
மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த ஆடியோ விவகாரத்தில் அது நிர்மலா தேவியின் குரல் தான் என்பது உறுதியாகியுள்ளது.
Recommended Video
சென்னை: மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த ஆடியோ விவகாரத்தில் அது நிர்மலா தேவியின் குரல் தான் என்பது உறுதியாகியுள்ளது.
கல்லூரி மாணவிகளை அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி பாலியல் தொழிலுக்கு அழைத்தார் என புகார் கூறப்பட்டது. இதுதொடர்பான தொலைபேசி ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிர்மலா தேவிக்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்தது.
குரல் மாதிரி பரிசோதனை
இதையடுத்து, நிர்மலா தேவிக்கு சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் கடந்த 28 ஆம் தேதி குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது.
புழல் சிறையில்
இதற்காக நிர்மலா தேவி மதுரை மத்திய சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். அன்று மாலை புழல் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு மயிலாப்பூரில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்தில் குரல் மாதிரி சோதனை நடத்தப்பட்டது.
சுமார் 3 மணி நேரம்
சுமார் 3 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது. அப்போது அவர் மாணவிகளிடம் எவ்வாறு போனில் பேசினாரோ அதுபோன்று பல விதங்களில் பேச வைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
தடயவியல்துறை உறுதி
இந்நிலையில் தொலைபேசி ஆடியோவில் பதிவான குரல் நிர்மலா தேவி உடையதுதான் என உறுதியாகியுள்ளது. அது நிர்மலா தேவியின் குரல் தான் என தடயவியல் துறை உறுதி செய்துள்ளது.
அறிக்கை ஒப்படைப்பு
தடயவியல்துறை உறுதி செய்ததை தொடர்ந்து நிர்மலா தேவியும் செல்போனில் இருப்பது தன்னுடைய குரல் தான் என ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து தடயவியல்துறை அறிக்கை சிபிசிஐடி போலீஸிடம் ஒப்படைப்பட்டுள்ளது.
கோர்ட்டில் தாக்கல்
தடயவியல்துறை ஒப்படைத்த அறிக்கையை சிபிசிஐடி போலீஸ் விரைவில் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளது. செல்போனில் பதிவானது நிர்மலா தேவியின் குரல்தான் என உறுதியாகியுள்ளதால் அவருக்கு நெருக்கடி முற்றியுள்ளது.