உலக புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் கோலாகலம்.. திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்
திருவாரூர் ஆழித்தேரோட்டம் இன்று வெகுவிமர்சியாக நடைபெற்றது.
திருவாரூர்: உலகப்புகழ் பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் இன்று வெகுவிமர்சியாக நடைபெற்றது. அமைச்சர் காமராஜ், மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
வரலாற்று சிறப்பு மிக்க கோயில் திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் ஆகும். அதிலும் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் ஆகும் திருவாரூர் தேர் ஆகும். இது 30 அடி அகலமும், 96 அடி உயரமும், 220 டன் எடையும் கொண்டது. அலைகடலென பக்தர்கள் திரண்டு தேர் இழுப்பதால் ஆழித்தேரோட்டம் எனப்படுவதாக கூறுவதுண்டு.
ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு கடந்த 20ஆம் தேதியே மூலவர் தேருக்கு கொண்டுவரப்பட்டு அலங்காரப் பணிகள் நடைபெற்று வந்தன. அதனை தொடர்ந்து சுவாமிக்கு தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில் இன்று காலை திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் ஆழித்தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. இதில் அமைச்சர் காமராஜ், ஆட்சியர் நிர்மல்ராஜ் தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு முன்னதாக திருவாரூரில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை இழுத்தனர். கீழ வீதியிலிருந்து புறப்பட்ட தேரானது முக்கிய வீதிகள் வழியாக சென்றதை பக்தர்கள் பக்தி பரவத்துடன் கண்டு களித்தனர்.