ரகுபதி கமிஷன் கலைப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்ததாக அமைக்கப்பட்ட ரகுபதி கமிஷனை சென்னை உயர் நீதிணன்றம் கலைத்து உத்தரவிட்டுள்ளது.
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், கடந்த திமுக ஆட்சியில் (2006-2011) புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் கூறியதால், ஹைகோர்ட் ஓய்வுப்பெற்ற நீதிபதி ஆர்.ரகுபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
திமுக சார்பில் கோர்ட் மூலம் கடந்த 2015ம் ஆண்டு தடைபெறப்பட்டது. இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி, தடை விதிக்கப்பட்ட நிலையில் இத்தனை ஆண்டுகளாக அந்த கமிஷனுக்கு அலுவலகம், ஊழியர்கள் என்று பெரும் தொகையை அரசு ஏன் செலவு செய்கிறது. மக்களின் வரிப்பணம் ஏன் வீணாகிறது என்று கருத்து தெரிவித்தார். வழக்கு விசாரணை இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இன்று வழக்கு மீண்டும் ஹைகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிடுகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அமைக்கப்பட்ட ஆணையம் இது. கலைக்க வேண்டும் என்று வாதிட்டார்.
அரசு தரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ரகுபதி ஆணையத்தை கலைக்க உத்தரவிட்டார். 2 வாரங்களில் அலுவலகத்தை காலி செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆவணங்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்கவும் ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை செயல்படாத விசாரணை ஆணையங்கள் எவை என்பதை தமிழக அரசு கண்டுபிடித்து அவற்றை கலைக்க 4 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் விசாரணை கமிஷன் நீதிபதிகள் அரசு பங்களாக்களில் தங்கியிருந்து விசாரிப்பது சரியில்லை. அரசு பங்களாக்களை அவர்கள் காலி செய்துவிட்டு அரசு அலுவலகத்தை பயன்படுத்தி விசாரிக்க வேண்டும். இவ்வாறு ஹைகோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.