கணக்கில் பணம் இல்லாமல் திரும்பிய செக்.. சம்பளம் கிடைக்காமல் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் அவதி!
சென்னை மாநகராட்சி வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு சம்பள காசோலைகள் திரும்பியுள்ளன.
சென்னை: மாநகராட்சி வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு சம்பள காசோலைகள் திரும்பியுள்ளன. இதனால் மாதம் பிறந்து 15 நாட்களை கடந்த பின்பும் சம்பளம் கிடைக்காமல் ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். சாலை அமைப்பது, பூங்காக்கள் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் ஒப்பந்ததாரர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நிதி நெருக்கடி காரணமாக பணிகள் முடிக்கப்பட்ட பிறகும் ஒப்பந்ததாரர்களுக்கு பில் தொகை வழங்கப்படாமல் 700 கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ஒப்பந்ததாரர்கள் செய்வதறியாமல் திணறி வருகின்றனர்.
துப்புரவு தொழிலாளிகள்
இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 14வது மண்டலம் 189வது வார்டுக்கு உட்பட்ட பள்ளிக்கரணையில் துப்புரவு தொழிலாளியாக 50க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதம்தோறும் 5ம் தேதி ரூ.10,380 சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
சம்பளத்துக்கான செக்
ஆனால், ஒவ்வொரு மாதமும் காலதாமதமாக வழங்குவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த மாதமும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தொழிலாளர்களுக்கு சம்பள தொகைக்கான செக் வழங்கப்பட்டதாக தெரிகிறது.
அதிகாரிகளிடம் முறையீடு
ஆனால், வங்கிகளுக்கு டெபாசிட் செய்தவர்களுக்கு பணம் இல்லை என்று காசோலை திரும்பியுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
தவிக்கும் தொழிலாளர்கள்
ஆனால், மாநகராட்சி வங்கி கணக்கில் பணம் இல்லாததால் இன்று வரை சம்பளம் வழங்கவில்லை. இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் தொழிலாளர்கள் தவித்து நிற்கின்றனர். சம்பளத்தை வழங்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.