ஜவாஹிருல்லா உள்ளிட்ட 5 பேர் சரணடைய சென்னை ஹைகோர்ட் உத்தரவு.. அவகாசம் முடிந்ததால் அதிரடி!
ஜவாஹிருல்லா உள்ளிட்ட 5 பேர் சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: ஜவாஹிருல்லா உள்ளிட்ட 5 பேர் சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சரணடைய விதிக்கப்பட்ட அவகாசம் நேற்றுடன் முடிவடைந்துவிட்டதால் 5 பேரும் உடனடியாக சரணடைய சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 1997-2000ம் ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக 1.55 கோடி ரூபாய் பெற்றதற்காக தமுமுக நிர்வாகியும், முன்னாள் எம்எல்ஏ-வுமான ஜவாஹிருல்லா, ஹைதர் அலி, சையது நிசார் அகமது, ஜி.எம்.ஷேக், நல்ல முகமது களஞ்சியம் ஆகிய 5 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
கடந்த 2011ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த பொருளாதார குற்றங்களுக்கான எழும்பூர் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றம் ஜவாஹிருல்லா மற்றும் ஹைதர் அலிக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும், சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக் மற்றும் நல்லமுகமது களஞ்சியம் ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதித்தது.
ரம்ஜான் நோன்புக்காக அவகாசம்
இந்தத் தீர்ப்பை சென்னை மாவட்ட 6-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன்பு உறுதி செய்தது. இதையடுத்து இந்த வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்ட ஜவாஹிருல்லா உள்ளிட்ட 5 பேரும் ரம்ஜான் நோன்பைக் காரணம் காட்டி சரணடைய காலஅவகாசம் வழங்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
கைது செய்யக்கூடாது
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், ஜவாஹிருல்லா உள்ளிட்ட 5 பேரும் சரணடைய ஒருவாரம் அவகாசம் அளித்தனர். அதுவரை அவர்களை போலீஸார் கைது செய்யக்கூடாது எனவும் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டிருந்தார்.
நேற்றுடன் முடிந்த அவகாசம்
நேற்றுடன் இந்த அவகாசம் முடிந்தும் ஜவாஹிருல்லா இதுவரை நீதிமன்றத்தில் சரணடையவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜவாஹிருல்லா உள்ளிட்ட 5 பேரும் உடனடியாக சரணடைய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
சரணடைந்தால் மட்டுமே விசாரணை
5 பேரும் சரணடையாமல் அவர்களின் ஜாமீன்ன மனுவை விசாரிக்க முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார். எழும்பூர் நீதிமன்றத்தில சரணடைந்துவிட்டு தகவல் தெரிவித்தால் மட்டுமே ஜாமீன் மனு மீது விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஜவாஹிருல்லா உள்ளிட்ட 5 பேரும் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.