முற்றிலும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது தி சென்னை சில்க்ஸ் அடுக்குமாடி கட்டடம்!
தீ விபத்துக்குள்ளான தி சென்னை சில்க்ஸ் கட்டடம் முழுவதும் இடித்து தரைமட்டாக்கப்பட்டுள்ளது.
சென்னை தீ விபத்துக்குள்ளான தி சென்னை சில்க்ஸ் கட்டடம் முழுவதும் இடித்து தரைமட்டாக்கப்பட்டுள்ளது. இதன் இடிபாடுகளை அகற்றும் பணி நாளை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வந்த தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் கடந்த 31ஆம் தேதி அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 2 நாட்களுக்கும் மேலாக நீடித்த இந்த தீயை 400க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
இந்த பயங்கர தீ விபத்தால் 7 அடுக்குகளை கொண்ட அந்தக் கட்டடம் எலும்புக்கூடானது. பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
அன்றே முடிவு
கட்டடத்தின் பெரும்பாலன பகுதிகள் உறுதித் தன்மையை இழந்து இடிந்து விழுந்தது. இதையடுத்து அந்தக் கட்டடத்தை இடிக்கலாமா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். முற்றிலும் உறுதியிழந்து நின்ற அந்தக்கட்டடத்தை இனியும் விட்டு வைப்பது ஆபத்து எனக்கூறப்பட்டதால் கட்டத்தை கடந்த ஒன்றாம் தேதி மாலையே இடிக்க முடிவு செய்தனர்.
2ஆம் தேதி தொடங்கிய பணி
இதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி கட்டடத்தை இடிக்கும் பணி தொடங்கியது. 2 ஜா கட்டர் எந்திரங்களை பயன்படுத்தி 7 அடுக்குமாடி கட்டடம் இடிக்கப்பட்டு வந்தது.
3 நாட்களுக்குள் இடிக்கப்படும்
3 நாட்களுக்குள் இந்தக் கட்டடம் இடித்து தரை மட்டமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களால் இடிக்கும் பணி இடையிலேயே நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மீண்டும் இடிக்கும் பணி நடைபெற்று வந்தது.
முழுவதும் இடிப்பு
அப்போது இடிக்கப்படாத கட்டடத்தின் பல பகுதிகள் இடிந்து விழுந்தன. இந்நிலையில் அடுக்குமாடிக் கட்டடம் இன்று முழுவதும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் அகற்றும் பணி
அருகில் உள்ள கட்டடங்களுக்கு பாதிப்பு வராத வகையில் கட்டடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் மேலும் கட்டத்தின் இடிபாடுகளை நீக்கும் பணி நாளை தொடங்கும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.