ஐஜியை விசாரிங்க.. டிஜிபியையும் விசாரிங்க.. அமைச்சரை விட்டுட்டீங்களே.. அட முதல்வருக்கே சிக்கல்ப்பா!
ஊழலில்டிஐஜி, ஐஜி, அமைச்சர், முதலமைச்சர் என அனைவருமே சிக்கியுள்ளனர்.
சென்னை: அன்று மட்டுமல்ல, என்றுமே பேரறிஞர் அண்ணா சொன்ன மாதிரி சட்டம் ஒரு இருட்டறைதான் போலும்!!
குற்றத்திற்கான தண்டனைகள் தற்போது யாருக்கும் முறையாக கிடைப்பதில்லை. குறைந்தபட்சம் அந்த குற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகள் கூட இல்லாமல் இந்த சமூகம் மாறிவிட்டது.
லஞ்ச ஒழிப்புத் துறை என்பது, தமிழகத்தில் இருக்கும் துறைகளிலேயே மாறுபட்ட ஒரு துறை. ஆனால் இதுவரை இந்த துறையில் ஊழல் சம்பந்தமான புகார்கள், முறைகேடுகள்தான் வந்திருக்கின்றன. ஆனால் முதல்முறையாக ஒரு பாலியல் புகார் இந்த துறையில் எழுந்துள்ளது. அது லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி தனக்குக் கீழ் பணியாற்றிய ஒரு பெண் எஸ்பியிடம் முறைகேடாக நடக்க முயன்றார் என்பதே.
விசாகா கமிட்டி
உண்மையிலேயே இப்படி ஒரு புகார் வந்ததும் அரசு தரப்பில் அனைவருமே அதிர்ச்சியடைந்தார்கள். எனினும் இதை கண்டுக்காமல் விடவும் முயற்சி நடந்திருக்கும். ஆனால், திமுக மாநிலங்களவை உறுப்பினர், கனிமொழி, தமிழக காவல்துறையில் ஏன் விசாகா கமிட்டி இல்லை என்று கேள்வி எழுப்பிய பிறகே, இது சம்பந்தமாக விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அப்படி அமைக்கப்பட்டாலும் அந்த கமிட்டிக்குள் எக்கச்சக்கமான பிரச்சனைகள் போய்க் கொண்டுதான் இருக்கின்றன.
வரலாறு காணாத ரெய்டு
இப்படி காவல்துறையில் பணியாற்றும் ஒரு பெண் எஸ்பிக்கே இந்த நிலை என்றால் மற்ற பெண் காவலர், பெண் உதவி ஆய்வாளளின் கதி என்ன? பாதுகாப்பு நிலை எப்படி? ஆனால் இதனை விசாரிக்க வேண்டிய முக்கிய பொறுப்பு முதலில் டிஜிபிக்குத்தான் உண்டு. ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால், புகாரை விசாரிக்க வேண்டிய டிஜிபியே ஊழலில் சிக்கியுள்ளதாக புகாருக்குள்ளாகியுள்ளார். இது சம்பந்தமாக "வரலாறு காணாத ரெய்டு" என்றே ஒரு பெயரும் உருவாகிவிட்டது. பதவியும் விலகவில்லை, அரசும் அவரை டிஸ்மிஸ் செய்யவில்லை, புகாருக்கு என்ன நடவடிக்கை என்றும் தெரியவில்லை. இப்படி இருக்கும்போது, டிஜிபி ராஜேந்திரன் எப்படி ஐஜியை புகாரை விசாரிக்க முடியும்?
திமுக வழக்கு
சரி, டிஜிபியை விசாரிக்க வேண்டியது முதமைச்சர்தானே? காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர்தானே இது சம்பந்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும்? ஆனால் அங்கும் ஒரு காலக் கொடுமையைப் பாருங்க.. முதல்வர் மீதே ஊழல் குற்றச்சாட்டு தொங்கிக் கொண்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு பற்றி கோர்ட்டில் வழக்கு போய்க் கொண்டிருக்கிறது. திமுக வழக்குத் தொடர்ந்துள்ளது.
நூதனமான சூழல்
இப்படி ஐஜியை விசாரிக்க வேண்டிய டிஜிபி மீது புகார், டிஜிபியை விசாரிக்க வேண்டிய முதல்வர் மீது புகார், முதல்வர் விசாரிக்க வேண்டிய அமைச்சர் மீதும் புகார் என படு வித்தியாசமான நூதனமான சூழலை தமிழகம் முதல்முறையாக சந்தித்துள்ளது...!