காவிரி விவகாரம்: திருச்சியிலிருந்து கல்லணைக்கு கிறிஸ்தவ அமைப்பினரின் மோட்டார் சைக்கிள் ஊர்வலம்
கிறிஸ்தவ அமைப்பினர் திருச்சியில் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் மேற்கொண்டனர்.
திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திருச்சியில் இருந்து கல்லணைக்கு கிறிஸ்தவ அமைப்பினர் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தை அய்யாக்கண்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் திருச்சியில் இருந்து கல்லணைக்கு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.
திருச்சி மேலப்புதூரில் உள்ள தூய மரியன்னை பேராலயத்தில் இருந்து புறப்பட்ட இந்த மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடக்க நிகழ்ச்சியில் திருச்சி பிஷப் அந்தோணிடிவோட்டா, பங்கு தந்தைகள், கிறிஸ்தவ அமைப்பினர், இளைஞர்கள், விவசாயிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஊர்வலத்தில் சென்றவர்கள் தங்கள் வாகனங்களில் 'காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு' என்ற வாசகம் எழுதப்பட்ட கொடியை வைத்து கொண்டு சென்றனர். ஊர்வலம் மேலப்புதூரில் இருந்து டி.வி.எஸ்.டோல்கேட், பழைய பால்பண்ணை, அரியமங்கலம், காட்டூர், திருவெறும்பூர், வேங்கூர் வழியாக கல்லணையை சென்றடைந்தது.
ஊர்வலத்தில் சென்ற இளைஞர்கள் வழிநெடுக பொதுமக்களிடம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியதன் அவசியத்தையும், இந்த போராட்டத்துக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் வலியுறுத்தி சென்றனர்.