பணி நிரந்தரம் வேண்டி செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதம்
சென்னை: பணிநிரந்தரம் செய்யக்கோரி செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில்ல் இறங்கியுள்ளனர்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி ஆய்வு நிறுவனம் ஆகும். இது உலகளவில் செம்மொழித் தமிழுக்கென்று நிறுவப்பெற்றுள்ள உயராய்வு நிறுவனமாகும்.
இந்நிறுவனம் 2008 மே 19 முதல் சென்னையில் இயங்கிவருகிறது. தற்போது அதன் பணியாளர்கள் தங்களின் பத்து கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 21-10-2013 முதல் உள்ளிருப்புப் போராட்டமாகவும், 23-10-2013 முதல் தொடர் உண்ணாநிலைப் போராட்டமாகவும் தொடங்கியுள்ளனர்.
அவர்களது கோரிக்கைகள்...
1. தமிழுக்குச் செம்மொழி எனும் தகுதியை வழங்கிய காலமுதல் இன்றுவரை இந்நிறுவனத்தின் வளர்ச்சியிலும் தமிழ்மொழி, தமிழினம் சார்ந்த பற்றிலும் தொடர்ந்து பல்லாண்டுகளாகப் பணியாற்றிவருகின்ற இந்நிறுவனப் பணியாளர்கள் அனைவரையும் இன்றளவும் கூலிகளாகவே வைத்துள்ளனர். எனவே அனைத்து அனுபவமிக்க பணியாளர்களையும் பணிநிலைப்புச் செய்ய வேண்டும்.
2. தமிழ்மொழிக்குச் செம்மொழி என்னும் தகுதியை வழங்கி ஒன்பது ஆண்டுகளாகியும் இன்றுவரை நிரந்தர இயக்குநர் நியமிக்கவில்லை. ஐஐடி போன்ற தொழில்நுட்பத் துறைகளி லிருந்து பொறுப்பு இயக்குநகர்களாக நியமித்துவரும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து உடனடியாக நடவடிக்கை எடுத்து தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட, ஆய்வுப் புலமையுடைய தமிழ் அறிஞரை நிலையான இயக்குநராக நியமிக்கவேண்டும்.
3. ஏனைய செம்மொழிகள் ஆய்வுகளுக்கு ஆயிரம் கோடிகளுக்கு மேல் பயன்படுத்தி வரும்வேளையில் உலகின் மூத்த மொழியாம் செம்மொழித் தமிழுக்கு ஒதுக்குகின்ற குறைந்தளவு நிதியையும் முழுமையாகப் பயன்படுத்தாமல் முடக்கப்பெற்று வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்திற்கு ஒதுக்குகின்ற நிதியை முழுமையாகப் பயன்படுத்துவதோடு கூடுதலாக பெற்றுத் தமிழ்மொழி வளர்ச்சிக்கு உதவிடவேண்டும்.
4. மத்திய அரசு பணியாளர்களுக்கு 90% அகவிலைப்படி நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் ஏழாவது ஊதியக்குழு அமைக்கப்பெற்றுள்ளது. ஆனால் இந்நிறுவனப் பணியாளர்களுக்கு 2009ஆம் ஆண்டிற்குப் பிறகு எவ்வித அகவிலைப்படியும் உயர்த்தப்படவில்லை. அதிலும் குறிப்பாகக் கொடுக்கப்பட்டுவந்த ஊதியத்தில் 30% எவ்வித முன் அறிவிப்புமின்றித் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. எனவே காலமுறை ஊதியமாக்கி நிலுவைத்தொகையுடன் வழங்கிட வேண்டும்.
5. கடந்த 2011ஆம் ஆண்டுவரை இந்நிறுவனத்தின் நடைமுறையாக இருந்துவந்த தொடர் பணிக்கால நீட்டிப்பு முறையினை நடைமுறைப்படுத்த வேண்டும்.
6. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதிநல்கையின் கீழ் செயல்படுத்திவரும் கருத்தரங்கு, பயிலரங்கு, குறுங்கால ஆய்வுத்திட்டம், முனைவர்பட்ட ஆய்வு, முனைவர்பட்ட மேலாய்வு உதவித்தொகை போன்ற செயல்திட்டங்களின் எண்ணிக்கைகளும் நிதி செலவினங்களும் குறைக்கப்பட்டுவருகிறது. இந்நிலையைத் தடுத்துத் தமிழகத் தமிழர்கள் மட்டுமின்றி உலகத் தமிழர்களும் பயன்பெறும் வகையில் விரிவாக்கம் செய்தல் வேண்டும்.
7. "தமிழ் படித்த அனைவரும் கடைந்தெடுத்த கயவர்கள்" எனத் தமிழ்மொழியையும் தமிழ் இனத்தையும் இழிவுப்படுத்திப் பேசிவருவதோடு மட்டுமின்றி இங்குள்ள தமிழ்க்குடிப் பணியாளர்கள் மீது அத்துமீறிச் சாதிய, பாலியல் வன்முறைகளைத் தொடுத்துவரும் பதிவாளர் முனைவர் மு. முத்துவேலு, நிதி அலுவலர் பெ.வை. கருணாகரன் ஆகியோரை உடனடியாக நிறுவனத்தைவிட்டு வெளியேற்ற வேண்டும். மேலும் வழக்கில் சிலரை நீதிமன்ற ஆணையின்படி கைதுசெய்திட வகை செய்யவேண்டும்.
8. இந்நிறுவனம் தன்னாட்சித் தகுதியுடன் 2008ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டபொழுது பன்னிரண்டு புலங்களாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்றளவும் புலங்களாக இயங்கவில்லை. எனவே உடனடியாகப் புலங்களை நடைமுறைப்படுத்தி 1000க்கும் மேற்பட்ட பணியிடங்களை உருவாக்கவேண்டும். மேலும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு நடுவங்கள் தொடங்கிடவேண்டும்.
9. ஆண்டொன்றுக்கு ஒரு கோடிக்குமேல் வாடகைக்கு மட்டுமே செலவு செய்துவரும் நிலையினை மாற்றித் தமிழக அரசால் இந்நிறுவனத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் நிலையான கட்டடம் கட்டக் கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்கிட வேண்டும்.
10. பணியாளர்களின் வாழ்வாதாரப் சிக்கல்களை முன்னெடுத்துப் போராடிவரும் பணியாளர் சங்கத்தினர்களை அச்சுறுத்தும் விதமாகவும் பழிவாங்கும் நோக்கத்துடனும் கொடுத்துவரும் தொடர் குறிப்பாணைகளைத் திரும்ப பெறவேண்டும்.