கையெழுத்தில்லாத ஆவணம் மூலம் தகுதி நீக்கம்... சபாநாயகர் நடுநிலை தவறிவிட்டார் - அபிஷேக் மனு சிங்வி
முதல்வருக்கு எதிராகத்தான் கடிதம் கொடுத்தோமே தவிர ஆட்சிக்கு எதிராக ஒருபோதும் கடிதம் அளிக்கவில்லை என்று தினகரன் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.
சென்னை: பெயரில்லாத,கையெழுத்தில்லாத ஆவணம் மூலம் கொறடா புகார் மனு சமர்பிக்கப்பட்டுள்ளது. அதனை வைத்து 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தகுதிநீக்கம் செய்து நடுநிலை தவறிவிட்டார் என்று தினகரன் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.
தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரும் ஆளுநரை சந்தித்து முதல்வருக்கு எதிராக கடிதம் அளித்தனர் என்ற காரணம் காட்டி சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார்.
இதை எதிர்த்து தகுதி நீக்கப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இன்று இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தது. தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களுக்காக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதிட்டார்.
முதலமைச்சர் மீது தான் நம்பிக்கையை இழந்தோமே தவிர ஆட்சி மீது அல்ல என வாதிட்டார். ஆட்சிக்கு எதிராக செயல்பட்ட ஓபிஎஸ் தரப்பு மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார்.
ஆட்சிக்கு எதிராக செயல்பட்ட ஓபிஎஸ் துணை முதலமைச்சராக ஆன பின்பே எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது ஏன்? என்றும் கேட்டார் அபிஷேக் சிங்வி.
பெயரில்லாத,கையெழுத்தில்லாத ஆவணம் மூலம் கொறடா புகார் மனு சமர்பிக்கப்பட்டுள்ளது. கொறடா அளித்த புகார் மனு தங்களுக்கு அளிக்கவில்லை என அபிஷேக் சிங்வி வாதிட்டார்.
ஊழலுக்கு எதிரான முதல்வருக்கு எதிராகத்தான் மனு கொடுத்தோம். அரசை கவிழ்க்க வேண்டும் என்று ஒருபோதும் கூறவில்லை.
சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ்க்கு நான்கு முறை எதிர்ப்பு தெரிவித்தும் ஒருதலை பட்சமாக நடவடிக்கை எடுத்து விட்டார் என்றும் தினகரன் தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.
கையெழுத்து இல்லாத ஆவணம் என்று கூறியதற்கு கொறடா தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி எதிர்ப்பு தெரிவித்தார். நீதிமன்றத்தில் கார சார வாதங்கள் நடைபெற்று வருகின்றன.