இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளராக முத்தரசன் மீண்டும் தேர்வு!
மன்னார்குடி: மன்னார்குடியில் நடந்த மாநாட்டில் இந்திய கம்யூ. கட்சியின் மாநில செயலாளராக முத்தரசன் மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மார்ச் 28ம் தேதி தொடங்கியது.
கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கொடியேற்றி துவக்கி வைத்தார். இந்த மாநாட்டில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி உட்பட முன்னணி தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
இன்று மாநாடு நிறைவுற்றது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இதுபோன்ற கூட்டத்தில், கட்சியின் செயல்பாடுகள் குறித்து அலசி ஆராயப்பட்டது.
மாநாட்டின் நிறைவு நாளான இன்று, அடுத்த 3 ஆண்டுகளுக்கான மாநிலக் குழு தேர்வு செய்யப்பட்டது. இந்திய கம்யூ. கட்சியின் மாநில செயலாளராக முத்தரசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, தமிழகம் முழுவதும் 4ம் தேதி ரயில் மறியல் செய்வது, தமிழகத்தில் பெட்ரோலிய மண்டலம் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் தமிழகம் வரும்போது கருப்புக்கொடி காட்டுதல் போன்ற பல்வேறு தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.