சசிகலாவுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் ஆச்சரியமாக உள்ளது.. பொங்கும் கருணாஸ்
சசிகலாவுக்கு விதிக்கப்பட்டுள்ள பரோல் நிபந்தனைகள் ஆச்சரியமாக உள்ளது என கருணாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை: சசிகலாவுக்கு விதிக்கப்பட்டுள்ள பரோல் நிபந்தனைகள் ஆச்சரியமாக உள்ளது என கருணாஸ் தெரிவித்துள்ளார்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ள கணவர் நடராஜனை சந்திக்க 5 நாட்கள் பரோலில் சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து வந்துள்ளார். அவருக்கு சிறைத்துறை நிர்வாகம் பல்வேறு அதிரடி நிபந்தனைகளை விதித்துள்ளது.
அதன்படி அரசியல் ரீதியாக சசிகலா யாரையும் சந்திக்க கூடாது, கட்சி, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது, மருத்துவமனைக்கு மட்டும்தான் செல்ல வேண்டும், மருத்துவமனை மற்றும் வீட்டில் பார்வையாளர்களை சந்திக்கக் கூடாது, காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கணவர் அருகில் இருந்து கவனித்து கொள்ளலாம், பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்கக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை சிறை நிர்வாகம் விதித்துள்ளது.
பேட்டி கொடுக்க முடியவில்லை
இதனால் சசிகலா இதுவரை மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்கவில்லை. பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. சிறைத்துறையின் கிடுக்கிப்பிடி நிபந்தனையால் அவரால் ஜெயலலிதா சமாதிக்குக்கூட செல்ல முடியவில்லை.
நிபந்தனைகளால் ஆச்சரியம்
இந்நிலையில் எம்எல்ஏ கருணாஸ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று தலைமைச்செயலகத்தில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சசிகலாவுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது என தெரிவித்தார்.
பேரறிவாளனுக்கு அனுமதி
பரோலில் வந்துள்ள பேரறிவாளனுக்கே அரசியல் தலைவர்களை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சசிகலாவுக்கு வழங்கப்படவில்லை என அவர்தெரிவித்தார்.
ஜெ.பெயரைக் கெடுக்கும் ஆட்சி
அண்மையில் நிகழ்ச்சியொன்றில் பேசிய கருணாஸ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். தற்போதைய ஆட்சியில் ஊழல் பெருகிவிட்டதாகவும் இது ஜெயலலிதா பெயரைக் கெடுக்கும் ஆட்சி என்றும் கருணாஸ் கூறியிருந்தார்.
சசிகலாவுக்கு விசுவாசம்
மேலும் தனக்கு எம்எல்ஏ சீட் வழங்கியது ஜெயலலிதா தான். ஆனால் அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது சசிகலாதான் என தனது விசுவாசத்தையும் வெளிப்படுத்தியிருந்தார் கருணாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.