ஒரு பக்கம் கொரோனா.. மறு பக்கம் ஆம்புலன்ஸ் "வெயிட்டிங்".. கடைக்கு போய் பக்கோடா வாங்கிய தாத்தா!
தென்காசி: தென்காசி மாவட்டம் புளியக்குடியில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான முதியவர் ஒருவர் ஆம்புலன்ஸை காத்திருக்க வைத்து விட்டு பக்கோடா வாங்கச் சென்று வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
தென்காசி மாவட்டத்தில் அண்மைக்காலமாக கொரோனா பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 200க்கும்மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டதால் அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 824 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் புளியங்குடியில் சுமார் 40 பேருக்கு கொரேனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அங்குள்ள பழைய மார்க்கெட் பகுதியான சிதம்பர விநாயகர் கோவில் தெருவில் 26 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவிலிருந்து பாதுகாக்க.. தமிழகம் முழுக்க முதியோருக்கு பிசிஜி தடுப்பூசி..தமிழக அரசு அதிரடி
புறப்பட்ட தாத்தா
அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு பெரியவருக்கும் இரு பெண்களுக்கும் கொரோனா தொற்று சோதனைக்கு பின்னர் உறுதியானது. அவர்களை அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் வந்திருந்தது. தங்களுக்கு தேவையான உடமைகளை பைகளில் எடுத்துக் கொண்டு 3 பேரும் ஒருவர் பின் ஒருவராக வந்தார்கள். அவர்களை அழைத்துச்செல்ல சுகாதாதார பணியாளர்களுடன் காவலர் ஒருவரும் வந்திருந்தார்.,
கட்டை பையை பாத்துக்க
இதில் கடைசியில் கட்டைப் பையுடன் ஆம்புலன்ஸில் ஏறுவதற்காக வந்த பெரியவர், திடீரென இதோ வருகிறேன் என்று சொல்விட்டு ஆம்புலன்ஸை காத்திருக்க வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். உடன் வந்த காவலரை தனது கட்டை பையை பார்த்துக்குமாறு சொல்லிவிட்டு ஸ்வீட் கடைக்கு சென்றார். அங்கு பக்கோடாவை பெரிய பார்சலாக கட்டி வாங்கிக் கொண்டு தனது பையில் பத்திரமாக வைத்துக்கொண்டார்
எடுத்துக் கொடுத்த இளைஞர்
இதை அதிர்ச்சியுடன் சுகாதார அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த ஸ்வீட் கடை அருகில் சர்வசாதாரணமாக முதியவருக்கு அருகே பொதுமக்களும் நின்று கொண்டு இருந்தனர். அப்போது கடை முன்பு அந்த முதியவர் தவறவிட்ட பணத்தையும் ஒருவர் அவருக்கு எடுத்து கொடுத்தார். ஆனால் நல்லவேளையாக முதியவர் கையில் கையுறை அணிந்திருந்தார். சுற்றியிருந்தவர்கள் முககவசம் அணிந்திருந்தார்கள்.
அலட்சியம்
கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும். கொரோனா பாதித்தவர்கள் தனித்து இருக்க வேண்டும் என்று அரசு பலமுறை அறிவுறுத்தியும் மக்கள் செய்யும் இதுபோன்ற சில அலட்சியங்கள் , பேராபத்தில் முடிகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட போது ஆம்புலன்ஸை காத்திருக்க வைத்து விட்டு பக்கோடா வாங்கிச் சென்ற சம்பவம் புளியங்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.