ஈரோட்டில் கழிவுகளை குப்பை தொட்டியில் கொட்டிய மருத்துவமனைக்கு அபராதம்!
கழிவுகளை குப்பை தொட்டியில் கொட்டியதால் மருத்துவமனைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோடு: மருத்துவமனை கழிவுகளை மாநகராட்சி குப்பை தொட்டியில் கொட்டிய மருத்துவமனைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் சேகரிக்கும் கழிவுகளை மாநகராட்சி குப்பை தொட்டிகளில் கொட்ட கூடாது என்பது விதி. இந்த கழிவுகளை மருத்துவமனைகளில் இருந்து சேகரித்து அழிப்பதற்கென்றே தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனமானது மருத்துவமனைகளில் கட்டணமும் வசூலித்து கொள்கிறது.
ஆனால் ஒரு சில தனியார் மருத்துவமனைகள் மருத்துவ கழிவுகளை மாநகராட்சி குப்பை தொட்டிகளிலேயே கொட்டி விடுகின்றனர். இதனால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் ஈரோடு பெரியார்நகரில் வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டியில் மருத்துவகழிவுகள் கொட்டப்பட்டிருப்பதை கண்ட மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ பகுதிக்கு வந்த ஈரோடு நகர்நல அலுவலர் டாக்டர் சுமதி தலைமையிலான அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
இதில் அதே பகுதியில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் இருந்து மருத்துவ கழிவுகள் கொட்டியது தெரியவந்தது. தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு 10 ஆயிரம் ரூபாய் அதிரடியாக அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஈரோட்டில் மருத்துவகழிவுகளை மாநகராட்சி குப்பை தொட்டியில் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.