மலேசியாவுக்கு கடத்த முயன்ற செம்மர கட்டைகள் பறிமுதல்: சுங்க துறையினர் அதிரடி
மலேசியாவுக்கு கடத்த முயன்ற 7 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடி: மலேசியாவுக்கு கடத்த முயன்ற 7 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னையிலிருந்து தூத்துக்குடி கடல் வழியாக பொருட்கள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுரை, தூத்துக்குடி சுங்கத்துறை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது மதுரை எலியார்பட்டி டோல்கேட்டை கடந்து சென்ற கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தினர். இதில் சென்னை மண்ணடியை சேர்ந்த ஒரு கம்பெனிக்கு நீர் இறைக்கும் மோட்டார்கள் தூத்துக்குடி துறைமுகம் வழியாக மலேசியாவுக்கு அனுப்பப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
சந்தேகத்தின் பேரில் கண்டெய்னரில் சோதனை நடத்தினர். இதில் முன்பகுதியில் நீரி இறைப்பு மோட்டார் பகுதிகள் இருந்தன. பின்பகுதியில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து கண்டெய்னரில் இருந்த சுமார் 9.50 மெட்ரிக் டன் எடையுள்ள செம்மரக்கட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.7 கோடியாகும்.
இந்த செம்மரக் கட்டைகளை சென்னையில் இருந்து கடத்தி வந்த தூத்துக்குடியை சேர்ந்த லாரி டிரைவர், கிளினர், சென்னை மண்ணடியை சேர்ந்த புரோக்கர் ஆகிய மூன்று பேரையும் சுங்க துறையினர் கைது செய்தனர். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. லாரி தூத்துக்குடியை சேர்ந்த அந்தோணி என்பவரது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவருக்கும் கடத்தலில் பங்கு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.