திடீர் வாக்கு வங்கியாக மாறும் வட மாநிலத் தொழிலாளர்கள்.. என்ன காரணம்.. பரப பின்னணி!
Recommended Video
சென்னை: தமிழகத்தை ஒரு புதிய அபாயம் வளைத்துப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இது இப்போது எழுந்ததில்லை. ரொம்ப காலமாகவே பேசி வருகிறார்கள். ஆனால் அதை யாருமே சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இது மிகவும் கவலைக்குரிய விஷயமாக தற்போது மாறி வருவதை அனைவரும் உணர ஆரம்பித்துள்ளனர்.
ஒரு திடீர் வாக்கு வங்கி தமிழகத்தில் உருவாகியுள்ளது. அது வேறு யாரும் அல்ல, வட மாநிலத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்தான். லட்சக்கணக்கில் வட மாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் குடியேறியுள்ளனர். முன்பெல்லாம் நீண்ட காலத்திற்கு முன்பே இங்கு குடியேறிய வட மாநிலத்தவர் மட்டுமே இருந்து வந்தனர்.
சென்னையை எடுத்துக் கொண்டால் செளகார்பேட்டை என்ற அளவில்தான் இவர்கள் இருந்தனர். ஆனால் இன்று தமிழகத்தில் தடுக்கி விழுந்தால் யாராவது பிகாரி மீதோ அல்லது உ.பி காரர் மீதோதான் விழ வேண்டி வரும். அந்த அளவுக்கு வட மாநிலத்தவர் பெருக்கம் அபரிமிதமாக அதிகரித்துப் போயுள்ளது.
கண்டு கொள்ளாத தமிழர்கள்
வட மாநிலத்தவர் பெருக்கம் என்பது ஆரம்பத்தில் மிக மிக குறைவானதாகத்தான் இருந்தது. கட்டுமானத் தொழிலில் மெதுவாக நுழைந்தனர். அதேபோல ஹோட்டல் பணிகளிலும் நுழைந்தனர். இன்று இந்த இரண்டு தொழில்களிலும் இவர்கள் இல்லாத இடமே இல்லை. இன்று சாதாரண வேலைகளுக்கும் கூட வட மாநிலத்தவர்தான் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். டீக் கடைகளில் கூட இவர்களை வேலைக்கு வைக்க ஆரம்பித்து விட்டனர். பெட்ரோல் போடும் வேலையில் இவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
வாக்கு வங்கியாக மாற்றம்
இந்த நிலையில்தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் வட மாநிலத் தொழிலாளர்களை வாக்கு வங்கியாக மாற்றத் திட்டமிட்டு வருகிறாரக்ள். அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க சதி நடக்கிறது. திமுகவுக்கு ஆதரவான வாக்காளர்களை நீக்க முயல்கிறார்கள். சிறுபான்மையினர் வாக்குகளையும் காலி செய்ய திட்டமிடுகிறார்கள். திமுகவினர் உஷாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.
உண்மை இல்லாமல் இல்லை
மு.க.ஸ்டாலின் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. இது நிஜமான ஆபத்துதான். நீண்ட காலமாகவே ஒலித்து வந்த அபாய சங்குதான். தமிழ்த் தேசியம் பேசுவோர் தேவையில்லாமல் இனவெறியைத் தூண்டுகிறார்கள் என்று அலட்சியப்படுத்தப்பட்ட உண்மையும் கூட. ஆனால் இந்த அபாயத்தை இப்போதுதான் அரசியல் கட்சியினர் உணர ஆரம்பித்துள்ளனர். இது நிச்சயம் தமிழகத்திற்கு மிகப் பெரிய சவாலாக மாறப் போவதையும் அனைவரும் உணர வேண்டும்.
கபளீகரமான தொழில்கள்
தமிழகத்தின் முக்கியத் தொழில்களில் இன்று தமிழர்கள் இல்லை. மாறாக வட இந்தியர்கள் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. அதேபோல ஆந்திரா, கேரளாவைச் சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். கட்டுமானத் தொழிலில் வட இந்தியர்கள் மிகப் பெரிய அளவில் ஊடுறுவி விட்டனர். சின்ன சின்ன வேலைகளிலும் கூட வட இந்தியர்களே அதிகம் உள்ளனர்.
மத்திய அரசு வேலைகளிலும்
மத்திய அரசுப் பணிகளிலும் அதிக அளவில் வட இந்தியர்கள் ஊடுறுவி வருகின்றனர். குறிப்பாக சென்னை வருமான வரித்துறை அலுவலகத்திற்குப் போனால் இந்தி பேசும் ஊழியர்களே அதிகம். தமிழ்நாட்டு ஊழியர்கள், அவர்களுடன் பேசக் கூட முடியாமல் தடுமாறுகின்றனர். இந்தி கற்றால்தான் ஆச்சு என்ற மோசமான நிலை வந்து விட்டது. இது தமிழ்நாடா அல்லது டெல்லியா என்ற சந்தேகம் வரும் பார்ப்பவர்களுக்கு. .அப்படி ஒரு மோசமான வட மாநில ஆதிக்கம் அங்கு நிலவுகிறது.
இது யாருடைய சதி
வட மாநில தொழிலாளர்கள் இங்கு பெருக தமிழர்களே முக்கியக் காரணம் என்றாலும் கூட இதை வைத்து குளிர் காய சில குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் காய் நகர்த்துவதாக சொல்கிறார்கள். திட்டமிட்டு வட மாநிலத்தவரை பெருமளவில் இங்கு குடியேற வைத்து அவர்களுக்கு ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என எல்லாவற்றையும் கொடுத்து தங்களுக்கு சாதகமாக வாக்களிக்க வைக்கும் சதிச் செயலாக இது பார்க்கப்படுகிறது.
ஊதிய சங்கு
இதைத்தான் இன்று அபாய சங்கொலியாக ஸ்டாலின் ஊதியுள்ளார். ஆனால் டாக்டர் ராமதாஸ், பெ. மணியரசன், சீமான் உள்ளிட்டோர் இதை முன்பிருந்தே கூறி வருகின்றனர். ஆனால் யாரும் கண்டு கொள்வதாக தெரியவில்லை. இதே நிலை நீடித்தால் நாளை பாண்டியன் மளிகைக் கடைக்குப் பதில் குப்தா ஸ்டோர்ஸ் அதிகரிக்கும் வாய்ப்புகளை மறுக்க முடியாது.
வரும் தேர்தலில் உங்களுக்கு முன்னால் சர்மாவும், பின்னால் பானர்ஜியும் வாக்களிக்கக் காத்திருந்தால் அதிர்ச்சி அடையாதீர்கள்.. இது உண்மையிலேயே நடக்கத்தான் போகிறது, தமிழக மக்கள் உஷாராக இல்லாமல் போனால்.