நெல்லை: மருத்துவமனையில் இறந்ததாக கூறிய குழந்தைக்கு சுடுகாட்டில் உயிர் வந்த அதிசயம்!
மருத்துவமனையில் இறந்ததாக கூறிய பிறந்த குழந்தைக்கு சுடுகாட்டில் உயிர் வந்தது.
நெல்லை: மருத்துவமனையில் இறந்ததாக கூறிய பிறந்த குழந்தைக்கு சுடுகாட்டில் உயிர் வந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் இல்லத்து பிள்ளை தெருவை சேர்ந்த வேலம்மாள் 25. இவர், பிரசவத்திற்காக சுரண்டை கமலா நர்சிங் ஹோம் மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்ந்தார். நேற்று காலையில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் சிறிது நேரத்திலேயே மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டது, உடனே கொண்டு அடக்கம் செய்யுங்கள் எனக் கூறி அனுப்பியுள்ளார்.
இதனால் உடன் இருந்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பிறந்த சில நிமிடங்களில் தாய் கண் விழிக்காமல் இருக்கும்போதே குழந்தை இறந்துவிட்டதை நினைத்து உறவினர்கள் கதறி அழுதபடி இறுதி சடங்கு செய்ய முயன்றனர். அவர்களது வழக்கப்படி காது குத்திதான் அடக்கம் செய்ய வேண்டும் என்பதால் மயானத்தில் குழந்தையை வைத்துவிட்டு நகை கடையில் உள்ள ஒருவரை அழைத்து வந்து குழந்தைக்கு காது குத்தினர். காது குத்தும்போது குழந்தை கதறி அழுவதைக் கண்டு திகைத்த உறவினர்கள் உடனடியாக தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.
சிறிதும் தாமதிக்காமல் விரைந்த 108 ஆம்புலன்சில் குழந்தை மயானத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டு, முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பாளை ஹை கிரவுண்ட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முறையாக பரிசோதனை செய்யாமல் குழந்தை இறந்துவிட்டது என கூறிய மருத்துவமனை மருத்துவர்களை உறவினர்கள் வன்மையாக கண்டித்துள்ளனர். அதே நேரத்தில் குறைவான நேரத்தில் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பாளை மருத்துவமனையில் அனுமதிக்க உதவிய 108 வாகன ஓட்டுநரை உறவினர்கள் மனதார பாராட்டினர்.