மீனவர்களிடையே மோதல்... 2 பேர் அடித்துக்கொலை... 15 பேர் காயம்...
திருவள்ளூர் அருகே மீனவ கிராமத்தில் இருபிரிவினர்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 2 பேர் அடித்துக்கொல்லப்பட்டனர்.
கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் வல்லம்பேடு மீனவ கிராமத்தில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் அடித்துக்கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் வல்லம்பேடு கிராமத்தில் 1500 பேர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் நடக்கும் கோயில் விசேஷங்கள் தொடர்பான கணக்கு வழக்குகளை கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு சத்திரத்தான் என்பவர் பார்த்து வந்தார். அப்போது கணக்கு வழக்குகளில் முறைகேடு செய்ததாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த எல்லப்பன் என்பவர் தரப்பு சத்திரத்தான் மீது குற்றம்சாட்டி அவரை பதவியில் இருந்து நீக்கியது.
கணக்கு வழக்குகள் எல்லப்பன் தரப்பைச் சேர்ந்த சரவணன் என்பவரிடம் கணக்கு வழக்குகள் ஒப்படைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே முன்பகை இருந்து வருகிறது. சத்திரத்தான் தரப்பினர் ஊரில் நடைபெறும் விசேஷங்களுக்கு ஒத்துழைப்புத் தராமல் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த தீபாவளியன்று இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி பொன்னேரி சார் ஆட்சியர் சமரசம் செய்து வைத்தார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அனைத்து கிராம மீனவ சங்கத்தினர் இருதரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதனமாக போக அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு அப்பகுதியில் உள்ள கோவிலிலில் எல்லப்பன் தரப்பினல் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கத்தி அரிவாள், வேல் கம்புடன் அங்குவந்த சத்திரத்தான் தரப்பினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் இரு தரப்பையும் சேர்ந்த குணசேகர், தேசப்பன், அண்ணாதுரை உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்தனர். 2 பேர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை கைதுசெய்துள்ளனர்.