அனைத்து வணிகர்கள் ஜி.எஸ்.டி. இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்: தமிழக அரசு அறிவுறுத்தல்
ஜி.எஸ்.டி. இணையதளத்தில் வணிகர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்யும்படி தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
சென்னை: அனைத்து வணிகர்களும் உடனடியாக தங்கள் விபரங்களை ஜி.எஸ்.டி., இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என வணிகவரித் துறை கமிஷனர் சந்திரமவுலி தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக தமிழக வணிக வரித்துறை கூடுதல் தலைமைச் செயலர் சந்திரமவுலி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சரக்கு மற்றும் சேவை வரி அமுல்படுத்தப்படுவதை முன்னிட்டு அனைத்து பதிவு பெற்ற வணிகர்களும் ஜி.எஸ்.டி. இணையதளத்தில் இணையும் வசதி, நாடு முழுவதும் விரைவில் முடிவடைய உள்ளது.
தமிழ்நாடு வணிகவரித்துறையில் பதிவு பெற்ற வணிகர்கள் அனைவரும் ஜி.எஸ்.டி. இணைய தளத்தில் தங்களது Digital Signature Certificate (DSC) (நிறுவனங்கள் என்றால்) அல்லது ஆதார் எண் உதவியுடன் மின் கையொப்பமிட்டு (e-Signature) (உரிமையாளர் / பங்குதாரர் என்றால்) தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
ஏற்கெனவே ஜி.எஸ்.டி. இணைய தளத்தில் விவரங்கள் பதிவு செய்த பெரும்பாலான வணிகர்கள் மேற்கூறப்பட்ட Digital Signature Certificate (DSC) / மின்கையொப்பத்துடன் பதிவு செய்யவில்லை.
எனவே அனைத்து வணிகர்களும் உடனடியாக ஜி.எஸ்.டி. இணையதளத்தில் தங்களது விவரங்களை Digital Signature Certificate (DSC)/ மின்கையொப்பத்துடன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.