பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.. பால் உற்பத்தியாளர்கள் சங்கம் முற்றுகை அறிவிப்பு
பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி உற்பத்தியாளர்கள் சங்கம் போராட்டம் அறிவித்துள்ளது.
ஈரோடு: மூன்று ஆண்டுகளாக உயர்த்தப்படாத பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அடுத்த மாதம் கோட்டை முற்றுகை நடத்தவிருப்பதாக பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநிலகுழு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆவின் பால் கலப்பட வழக்கில் முறையான வாதத்தை முன்வைக்காததால் குற்றவாளிகள் தப்பி உள்ளதாகவும் இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மேலும் கால்நடை தீவனங்களை மான்ய விலையில் வழங்குவதோடு ஆவின்பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆவின் நிறுவன பாலில் மோசடி செய்த வைத்தியநாதன் வழக்கை, பொது நலன் கருதி சிபிஐ விசாரணைக்கு மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் பொதுசெயலாளர், முகமது அலி மூன்று ஆண்டுகளாக உயர்த்தப்படாத பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக ஜூலை மாத இறுதியில் தலைமை செயலகம் மற்றும் ஆவின் நிறுவன அலுவலகங்களை முற்றுகையிட போவதாக கூறினார். எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் 35 ரூபாயில் இருந்து 45 ரூபாயாகவும், பசும்பால் 28 லிருந்து 35 ரூபாயாகவும் உயர்த்த வேண்டும் என்றார்.
மேலும் ஆவின் நிறுவன பாலில் மோசடி செய்த வைத்தியநாதன் வழக்கை மேல்முறையீடு செய்து சிபிஐ விசாரிக்க கோரிக்கை விடுத்த முகமது அலி, ஆவின் நிறுவனமும், சிபிசிஐடியும் கூட்டு சேர்ந்து வைத்தியநாதன் வழக்கில் முறையாக ஆவணங்களை தாக்கல் செய்யாததால் உயர்நீதிமன்றம் குற்றவாளிகளை விடுவித்ததாகவும் குற்றம் சாட்டினார்.