பெண்களின் உணர்வுகளை காவியங்களாக்கிய பெருமை கே.பி.க்கு மட்டுமே உண்டு!
இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் பிறந்தநாள் விழா இன்று.
Recommended Video
சென்னை: சமூகத்தின் பல்வேறு முரண்பாடுகளையும், அடிப்படையான கோளாறுகளையும் அம்பலப்படுத்தும் ஊடகமாக காதலை பயன்படுத்துவதில் பாரதிராஜாவுக்கு முன்னோடி பாலச்சந்தர். பாலச்சந்தரின் படங்களில் பெரும்பாலானவை பெண்ணீயம் சம்பந்தப்பட்டதுதான். இந்திய திரை வரலாற்றில் குறிப்பாக தமிழ்திரையில் பெண்கள் பிரச்சனையை அடிப்படையாக வைத்து நிறைய படங்களை உருவாக்கியவர் பாலச்சந்தர்.
பெண்களை இழிவுபடுத்தாமல், கொச்சைப்படுத்தாமல், ஆபாச பிண்டங்களாய புரட்டி எடுக்காமல் அவர்களுக்கு இதயம் இருக்கிறது, உணர்ச்சி இருக்கிறது, வாழ்க்கைக்கான தேடல் இருக்கிறது, தமக்கு இழைக்கப்பபடும் அடக்குமுறைகளையும் கொடுமைகளையும் எதிர்க்கும் நிற்கும் போர்க்குணம் இருக்கிறது என்பதை பல படங்களில் எடுத்துக் காட்டியவர் பாலச்சந்தர்.
அழகான கையாளுமை
குடும்பத்திற்காக உழைத்து உழைத்து திருமணம் கூட செய்து கொள்ள முடியாமல் வேலை செய்யும் எந்திரமாகவே மாறிப்போய்விடும் பெண்களின் உள்ளக்குமுறல்தான் 'அவள்ஒரு தொடர்கதை'. குடும்பத்தின் நல்வாழ்விற்காக உடன் பிறந்தோரின் ஆசை அபிலாஷைகளையும் சமூக அந்தஸ்தையும் நிலைநாட்டுவதற்காக விலைமாதுவாய் மாறும் அவலத்திற்கு ஆளாகும் கதைதான் 'அரங்கேற்றம்'. அதன் கருத்துக்காகவும், கையாளுமைக்காகவும், அது வெளியான காலகட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
பெண்ணின் துணிச்சல்
தாலிகட்டியதால் மட்டுமே தன்னை கொத்தடிமையாய் பிணைத்து, அணுவளவு மனசாட்சிக்கூட இல்லாமல் அநியாய அக்கிரமங்களை நிகழ்த்தி கொண்டிருக்கும் கணவனை தூக்கியெறிந்துவிட்டு அவன் கட்டிய தாலியை கோயில் உண்டியலில் போடும் புதுமை பெண்ணின் துணிச்சல்தான் "அவர்கள்". சர்வர்சுந்தரம், எதிர்நீச்சல், நீர்க்குமிழி, வானமே எல்லை போன்றவை வாழ்க்கையின் மீது நம்பிக்கையும் சக மனிதன் மீது நேசத்தையும் ஊட்டிய படங்கள் ஆகும். இதில் முத்தாய்ப்பு வாய்ந்தது 'புன்னகை' என்ற படம். மனித நேயத்தையும், கடமை உணர்ச்சியையும், நேர்மை தவறாத நெறியையும், பெண்மையை பாதுகாத்து போற்றும் தியாகத்தையும் உள்ளடக்கிய சமூக ரீதியாக எதார்த்தவாத படம்தான் "புன்னகை".
உறவு சிக்கல் விரும்பி
பாலச்சந்தரே எழுதி இயக்கிய இந்திப் படமான ‘ஏக் துஜே கே லியே' 1981-ல் வெளிவந்து காதல் சினிமாக்களின் டிரெண்ட் செட்டராக அமைந்தது. உறவுகளில் இடியாப்ப சிக்கல்களை கொண்டு கதாபாத்திரம் படைத்த எழுத்தாளர் தி.ஜானகிராமன்போல, தனது படங்களிலும் உறவு சிக்கலை புகுத்தி பார்த்தவர் பாலச்சந்தர். அபூர்வராகங்கள், சொல்லத்தான் நினைக்கிறேன், சிந்துபைரவி அதற்கு சிறந்த உதாரணங்கள். கதையின் நாயகியை, புரட்சி பெண்ணாக மட்டும் இல்லாமல், கணவனே உலகம் என்று வாழும் கதாபாத்திரங்களான 'சிந்துபைரவி' சுலஷ்னா, 'அக்னிசாட்சி' சரிதா, 'இருகோடுகள்' ஜெயந்தியையும் கண்முன் நிறுத்தியவர்.
கே.பி.க்குத்தான் முதலிடம்
தமிழ்த்திரையில் பெண்களைப் பற்றியும், பெண்களின் பிரச்சனைகள் குறித்தும், பெண்களின் பல்வேறு வகையான உணர்ச்சிக் குவியல்களையும் வைத்து நிறைய படங்களை இயக்கியவர்களில் கே.பாலச்சந்தருக்குதான் என்றுமே முதலிடம் உண்டு. அவற்றினை அவரை தவிர வேறு யாராலும் என்றுமே நிரப்ப முடியாது!