10ஆம் வகுப்பு ரிசல்ட் முடிவிலும் விருதுநகர் தான் முதலிடம்.. கடலூருக்கு கடைசி இடம்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதிலும் அதிக தேர்ச்சி சதவீதத்தை கொடுத்து விருதுநகர் மாவட்டமே முதலிடத்தை பிடித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 10ம் வகுப்பு தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது. தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வில் 94.4% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வை போலவே பத்தாம் வகுப்பு தேர்விலும், ரேங்க் முறை அறிவிக்கப்படவில்லை.தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றை இணைய தளத்தில் பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாவட்ட வாரியான தேர்ச்சி சதவீதம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டம் 98.5 சதவீத தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது. ப்ளஸ் டூ ரிசல்ட்டிலும் விருதுநகர் மாவட்டமே முதலிடம் பெற்றது.
கன்னியாகுமரி 98.17% எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது. ராமநாதபுரம் 98.16% எடுத்து மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. மூன்று ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த ஈரோடு மாவட்டம் நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதேபோல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவிலும் கடலூர் மாவட்டம் 88.7 சதவீதம் பெற்று கடைசி இடத்தையே பிடித்துள்ளது. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவிலும் கடலூர் மாவட்டம் கடைசி இடத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.