தேர்தல் கூட்டணி பற்றி முடிவெடுக்க விஜயகாந்த்துக்கு அதிகாரம்: தேமுதிக தீர்மானம்
பெரம்பலூர்: தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் பெரம்பலூரில் இன்று அதன் தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. தமிழக சட்டசபை தேர்தல் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் விஜயகாந்த்துக்கு வழங்கப்படும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேமுதிகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையம் அருகே இன்று காலை கூடியது. கூட்டத்தின் நுழைவாயில், தமிழக சட்டசபை போன்ற தோற்றத்தோடு வடிவமைக்கப்பட்டிருந்தது.
ஆங்காங்கு, விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் உள்ளிட்டோரின் புகைப்படங்கள், கட்-அவுட்டுகளாக மின்னின. இந்தக் கூட்டத்துக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார்.
தமிழகத்தில் வெள்ளத்தால் உயிரிழந்தோர், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவு, காந்தியவாதி சசிபெருமாள் மறைவு உள்ளிட்டவற்றுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்திய பிறகு கூட்டம் தொடங்கியது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல், கூட்டணி, தொகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் போன்றவை குறித்து இந்தக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மதியம் ஒரு மணியளவில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது.
இத்தீர்மானத்தில், சட்டசபை தேர்தலில் கூட்டணி பற்றி முடிவெடுக்கும் அதிகாரம் விஜயகாந்த்துக்கு வழங்கப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பால் ஏற்பட்ட சேதத்திற்கு தமிழக முதல்வர்தான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், தேமுதிகவை முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டு பழிவாங்குகிறார் என்றும் தீர்மானத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், தாது மணல் கொள்ளை, கிரானைட் முறைகேடு, மணல் கொள்ளை போன்ற விவகாரங்களை உயர்நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்றும், மது விலக்கு, லோக்ஆயுக்தா போன்றவற்றை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட மொத்தம் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.