வறட்சியால் டெல்டா மாவட்டங்களில் நெல் உற்பத்தி வரலாறு காணாத அளவில் 90 சதவீதம் வீழ்ச்சி!
வறட்சியால் டெல்டா மாவட்டங்களில் நெல் உற்பத்தி கடுமையாக குறைந்துள்ளது.
தஞ்சை: வறட்சியால் டெல்டா மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு நெல் உற்பத்தி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் 90 சதவீதம் நெல் உற்பத்தி குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவியது. பருவ மழைகளும் ஏமாற்றியதால் குடிநீருக்கே பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடக அரசும் காவிரியில் தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை வழங்க வில்லை. மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டமும் அதல பாதாளத்துக்கு செல்லவே மோட்டார் பம்புகள் கூட கைக்கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
மாண்ட விவசாயிகள்
இதனால் தமிழகத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெல் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரின்றி வறட்சியால் காய்ந்து சருகாய் போனது. இதனால் கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் கடன் காரர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனமுடைந்து மாரடைப்பால் உயிரிழந்தனர்.
90% உற்பத்தி வீழ்ச்சி
இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு நெல் உற்பத்தி குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் 90 சதவீத நெல் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.
நெற்களஞ்சியத்தில் குறைவு
கடுமையான வறட்சி மற்றும் காவிரியில் கர்நாடகா தண்ணீர் வழங்காததே இந்த வீழ்ச்சிக்கு காரணம் எனக்கூறப்படுகிறது. அதன்படி நெற்களஞ்சியம் என போற்றப்படும் தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2015-16ஆம் ஆண்டுகளில் 4 முதல் 5 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த நெல் உற்பத்தி 2016-17ஆம் ஆண்டுகளில் 72,756 மெட்ரிக் டன்னாக குறைந்துள்ளது.
திருவாரூரில் சரிவு
இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2015-2016ஆம் ஆண்டுகளில் 5 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. ஆனால் 2016-17ஆம் ஆண்டுகளில் 1,11000 மெட்ரிக் டன்னாக நெல் உற்பத்தி சரிந்துள்ளது.
நாகை மாவட்டத்திலும் வீழ்ச்சி
நாகை மாவட்டத்தில் கடந்த 2015-16ஆம் ஆண்டுகளில் 3,16000 மெட்ரிக் டன்னாக நெல் உற்பத்தி இருந்தது. ஆனால் 2016-17 ஆண்டுகளில் 16235 மெட்ரிக் டன்னாக நெல் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.