20 தொகுதிகளுக்கும் உடனே இடைத் தேர்தல் நடத்த வேண்டும்.. ஸ்டாலின் அதிரடி கோரிக்கை
20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் உடனடியாக நடத்த வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை அறிவாலயத்தில் நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த அனைத்து பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டம்
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு மற்றம் வரப்போகிற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
சட்டமன்ற தேர்தல்
"நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வந்தால் எப்படி செயல்படுவது என ஆலோசனை செய்தோம்.
கவலைப்படவே இல்லை
திமுகவை பொறுத்தவரை ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்பதுதான் ஒரே கொள்கை. மற்றபடி எதை பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை. எதிர்பார்க்கவும் இல்லை. மக்கள் திமுகவுக்கு என்றுமே ஆதரவு தர காத்து கொண்டிருக்கிறார்கள். எனவே திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 20 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
|
திமுக தயாராக உள்ளது
இந்த 20 தொகுதிகளுக்கும் உடனடியாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்தை நான் வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன். அதனால் எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.