நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு தரும் அவசர சட்டம் இன்று வெளியாகிறது?
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வகையில் இன்று அவசரச்சட்டம் இயற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வகையில் இன்று அவசரச்சட்டம் இயற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு தமிழகத்தில் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழ் வழி பயின்ற ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் மருத்துவ படிப்பில் தமிழக அரசின் 85 சதவீத இடஓதுக்கீட்டை சென்னை ஹைகோர்ட் அண்மையில் ரத்து செய்தது. இதனால் தமிழக மாணவர்களின் மருத்துவப்படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
தமிழக அரசின் அலட்சியமே இதற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதைத்தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் தொடர்ந்து மத்திய அமைச்சர்களை சந்தித்து நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை அமைச்சர் விஜயபாஸ் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்திக்க டெல்லி சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வகையில் இன்று அவசரச்சட்டம் இயற்றப்படும் என தெரிகிறது.