கால்டுவெல் 200வது பிறந்தநாள்: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பணியாளர்கள் கொண்டாட்டம்
சென்னை: கால்டுவெல்லின் 200வது ஆண்டு பிறந்தநாள் விழா செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பணியாளர்கள் சங்கம் சார்பில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்குப் பணியாளர்கள் சங்கத் தலைவர் முனைவர் அ.ஆரோக்கியதாசு தலைமை தாங்கினார்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன அலுவலகத்தின் முகப்பில் பணியாளர்கள் சங்கம் சார்பில் கால்டுவெல்லின் படம்வைத்து மலர்தூவி மாலையிட்டு மரியாதை செய்யப்பட்டது.
பின்னர் அவரது புகழினை முனைவர் அ.ஆரோக்கியதாசு எடுத்துரைத்தார்.
கால்டுவெல் அவர்கள் அயர்லாந்து நாட்டில் 1814ஆம் ஆண்டு பிறந்தார். தமது இளமைக்காலத்திலேயே சமயப்பற்று மிக்கவராகத் திகழ்ந்த கால்டுவெல் அவர்கள் தமது 24ஆம் வயதில் 1838ஆம் ஆண்டு சமயப்பணிக்காக தமிழகம் வந்தார். இங்கு நற்செய்தி பரப்புவதற்கான சபையினருடன் இணைந்து செயல்பட்டார்.
சமயப்பணிக்குத் தமிழ்மொழி அவசியமென்பதை உணர்ந்த கால்டுவெல் அவர்கள் தமிழ்மொழியைக் கற்றார். அதோடு தமிழ்மொழியோடு தொடர்புடைய ஏனைய மொழிகளையும் நன்கு கற்றறிந்தார்.
திருநெல்வேலியில் கால்டுவெல்
திருநெல்வேலி இடையன்குடியில் 50 ஆண்டுகள் தங்கி சமயப்பணியுடன் தமிழ்ப்பணியையும் மேற்கொண்டார். இந்திய மொழிகளுக்கெல்லாம் சமஸ்கிருதமே தாய்மொழியெனவும் மூத்தமொழியெனவும் இங்கிருந்த தமிழ்மொழி பகைமைவாதிகளும் மேலைநாட்டு அறிஞர்களும் சொல்லிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில், தமிழ்மொழியையும் அதன்வழி பிறந்த சேய்மொழிகளான தென்னிந்திய மொழிகளையும் ஆய்வுக்குட்படுத்தினார்.
தமிழ்மொழியின் மேன்மை
தமிழ்மொழி தனித்து இயங்கக்கூடிய ஆற்றலும் தனித்தன்மையும் உள்ள மொழியெனவும் சமஸ்கிருதமொழியின் உதவில்லாமல் தனித்தன்மையுடன் பன்னெடுங்காலமாக வளமுடன் வாழ்ந்துவரும் மொழியெனவும் தமிழ்மொழியின் மேன்மையை உலகிற்கு உணர்த்தியவர் கால்டுவெல் ஆவார்.
கால்டுவெல் ஆராய்ச்சி
மேலும் தமிழ்மொழிக்குச் செம்மொழித் தகுதி கேட்டுப் பன்னெடுங்காலமாக தமிழ்ப்பேரினம் போராடி அண்மையில் தமிழுக்குச் செம்மொழி எனும் தகுதியை இந்திய அரசு வழங்கியது. அத்தகுதி கிடைப்பதற்குக் கால்டுவெல்லின் ஆராய்ச்சி பதிவுகள் இன்றியமையாதவையாகும்.
திராவிட மொழிகள்
தென்னிந்திய மொழிகளைத் திராவிட மொழிகள் என்று அழைக்கும் வழக்கத்தை ஆங்கிலேயர்கள் உருவாக்கினர். ஃபிரான்ஸிஸ் வைட் எல்லீஸ் அவர்கள் தென்னிந்திய மொழிகளைத் திராவிட மொழிகள் என்று அழைத்தார். அவரைத்தொடர்ந்து வந்த கால்டுவெல் அவர்களும் திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.
தமிழ்மொழிக்கு பெருமை
மேலும் சமஸ்கிருத மொழியைமட்டுமே ஆய்வுக்குட்படுத்தி எழுதிவந்த மேலை ஆய்வாளர்களுக்குமாறாக தமிழ்மொழியையும் அதோடு ஒப்புமையுடைய நிலையில் உள்ள மொழிகளையும் ஆய்வுக்குட்படுத்தியவராவார். அதன்வழி தமிழையும் அதன் சேய்மொழிகளையும் ஒருகுடும்பமாக சொல்லவேண்டுமென்பதற்காக திராவிட எனும் பொருண்மையில் கூறினார்.
தொல்காப்பியம்
சங்க இலக்கியங்கள் முழுமையும் தேடிப்பார்த்தாலும் திராவிடம் என்ற சொல் இல்லை. தமிழ்,தமிழர், போன்ற சொற்களே பயின்று வந்துள்ளன. "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்" எனும் தொல்காப்பிய பாயிரத்தில் தமிழ்நில வரலாறு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
தமிழய மொழிக்குடும்பம்
இந்நிலப்பரப்பு முழுமையும் தமிழ்மொழியே பேசப்பட்டு எழுதப்பட்டு வந்தது. எனவே திராவிடம் எனும் கோட்பாடும் கொள்கை உருவாக்கமும் பிற்காலத்தியதேயாகும். எனவே திராவிட மொழி, திராவிட மொழிக்குடும்பம் என்று தற்போது மொழியியலாளர்களும் கல்வியாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் கூறிவருவதற்குப் பதிலாக தமிழியம், தமிழிய மொழி, தமிழிய மொழிக்குடும்பம் என்று கூறுவதே சரியான முறையாக அமையும். இந்நன்னாளின் இத்தகைய உறுதியேற்போம்.
கால்டுவெல் பிறந்தநாள் அரசுவிழா
மேலும் தமிழக அரசு கால்டுவெல்லின் பிறந்த நாளை அரசுவிழாவாக கொண்டாடி சிறப்பிப்பதற்குப் பணியாளர்கள் சங்கம் தமிழக முதல்வருக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது' என்றார்.