யார் இந்த ராக்கெட் ராஜா?
பிரபல ரவுடி ராக்கெட் ராஜா இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: ஒருவழியாக ரவுடி ராக்கெட் ராஜாவை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துவிட்டனர்.
யார் இந்த ராக்கெட் ராஜா?
திசையன்விளை அருகில் உள்ள ஆனைகுடியை பூர்வீகமாக கொண்டவர் இந்த ராஜா. தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு கட்சியின் தலைவர் பசுபதி பாண்டியன் என்பவரின் கொலையில் முதன்முதலில் போலீசாருக்கு சந்தேக கண் விழுந்ததே இந்த ராக்கெட் ராஜா மீதுதான். ஆனால் இந்த வழக்கில் அவரது பெயரை பகிரங்கமாக சேர்க்க முடியாமல் போலீஸ் திணறியது. போதிய ஆதாரம் இல்லையே என துடித்து கொண்டிருந்தது.
எனினும் காவல்துறையின் சந்தேகப்பார்வையிலேயேதான் ராஜா உலவிவந்தார். இதையடுத்து கராத்தே செல்வினை கொலை செய்த கட்டதுரை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக ராஜாவை சேர்த்து நிம்மதி பெருமூச்சுவிட்டது காவல்துறை. ஆனால் விதி? அந்த வழக்கிலிருந்து மிக எளிதாக வெளியே வந்துவிட்டார் ராக்கெட் ராஜா.
கெத் கூடிய ராக்கெட் ராஜா
ஒருமுறை சிறைசென்று வெளியேவந்துவிட்டால் அனைத்து ரவுடிகளுக்கும் கெத் கூடிவிடும்போல. சிறையிலிருந்து வெளி வந்தவர் நேராகஅகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனர் வெங்கடேச வெங்கடேச பண்ணையாரிடம் வந்து சேர்ந்தார். நாளடைவில் அவருக்கு நெருக்கமானார். மெல்ல மெல்ல வெங்கடேச பண்ணையாரின் தளபதியானார். ஆனால் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சென்னையில் வைத்து போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். ஆடிய காலும், பாடின வாயும் சும்மா இருக்காது என்பார்களே.. அதுபோல பண்ணையாரின் மறைவுக்கு பிறகு தன்னுடைய செல்வாக்கையும், பலத்தையும், தக்கவைத்துக்கொள்ள சுபாஷ் பண்ணையாருடன் இணைந்து செயல்பட்டார்.
கடைசி வாக்குமூலம் என பரபரப்பு
அப்போது ராக்கெட் ராஜா மீது கொலை, ஆள்கடத்தல், துப்பாக்கியை காட்டி மிரட்டுதல் உள்ளிட்ட பல வழக்குகள் பதிவாகின. எனவே தலைமறைவு வாழ்க்கை வாழ தொடங்கினார். எனினும் தன்னுடைய காரியங்களை திரைமறைவில் அவர் சாதித்துக் கொண்டுதான் இருந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு திடீரென ஒரு பரபரப்பு வீடியோ வெளியிட்டார். அதில் நெல்லை போலீசார் தன்னை என்கவுன்டர் செய்ய உள்ளதாகவும், தான் சரணடைந்தாலும் என்னை கொல்வது உறுதி எனவும் பதறியிருந்தார். மேலும் இது தன்னுடைய கடைசி வாக்குமூலமாககூட இருக்கலாம் என பீதியில் உளறி கொட்டியிருந்தார் அந்த வீடியோவில்.
சுற்றிவளைத்து கைது
இதன்பிறகு, அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா, மறைந்த ஜெயலலிதா, சசிகலா மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி அவர்களை பகைத்துக் கொண்டபிறகு, சசிகலா புஷ்பாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ராக்கெட் ராஜா கவனிக்க தொடங்கினார். எனினும் காவல்துறை ராக்கெட் ராஜா மீதான தேடுதல் வேட்டையை வலையை விரித்துதான் வைத்திருந்தது. கைது நடவடிக்கையின் வளையத்துக்குள் ராக்கெட் ராஜா வலம் வந்துகொண்டுதான் இருந்தார். இந்நிலையில் ஒருவழியாக போலீசார் அவரை சென்னையில் சுற்றிவளைத்து கைது செய்து தங்களின் நீண்ட நாள் கடமையை நிறைவேற்றியிருக்கிறார்கள்.
காற்றிலே கலந்துவிடக்கூடாது
குற்றவாளிகள் பிடிபடும் செய்திகள் எல்லாம் பரபரப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் சிறை, நீதிமன்றம் சென்றால் உரிய தண்டனை வழங்கப்படுமா என தெரியவில்லை. ஏனெனில் முன்ஜாமீன் என்ற முறை இருக்கும்வரை சட்டத்தின் ஒட்டைகள் இதுபோன்ற சமூக குற்றவாளிகளுக்காக என்றுமே திறந்தே இருக்கிறது. ராக்கெட் ராஜா விஷயத்தில் விசாரணைகள் சரியான வட்டத்துக்குள் அமைந்தால் மட்டுமே பாடுபட்டு கைது செய்த போலீசாரின் கடமைக்கு மரியாதை கிடைக்கும். இல்லையென்றால் கைது நடவடிக்கை என்பது வழக்கம்போல் காற்றிலே கலந்துபோகும் சொல்லாகிவிடும்.