மதுரவாயலில் 2 மகன்களுக்கு விஷம் கொடுத்து தந்தையும் தற்கொலை.. அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு
2 மகன்களுக்கு விஷம் கொடுத்து விட்டு தந்தையும் தற்கொலை செய்துகொண்டார்.
Recommended Video
சென்னை: 2 மகன்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் மதுரவாயல் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூட்டிய வீட்டினுள் அழுகிய நிலையில் கிடந்த 3 பேரின் உடல்களை மீட்டு போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
காரைக்குடியை சேர்ந்தவர் ஹபீப்ரகுமான். இவர் மதுரவாயல் அடுத்த சேக்மான்யம், காமதேனு நகரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அனிஷா பாத்திமா என்பவரை காதலித்து திருமணம் செய்தவர்.
மகன்களை வளர்த்த தந்தை
இவர்களுக்கு முகமது நயீட் என்ற 6 வயது மகனும், ரயான் என்ற 3 வயது மகனும் உள்ளனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக அனிஷாபாத்திமா கணவனை விட்டு பிரிந்து அவர் தாயாருடன் இலங்கையில் வாழ்ந்து வருகிறார். இதனால் 2 மகன்களையும் ஹபீப்ரகுமான்தான் வளர்த்து வந்தார்.
சடலங்கள் மீட்பு
இந்நிலையில், கடந்த 2 தினங்களாக வீட்டின் கதவு திறக்கப்படாமலே இருந்தது. அதோடு வீட்டிலிருந்து துர்நாற்றமும் வீசியது. இதனால் அப்பகுதி மக்கள் மதுரவாயல் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார், உள்பக்கமாக பூட்டியிருந்த கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது தந்தை மற்றும் 2 மகன்களின் உடல்கள் அழுகிய நிலையில் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மூன்று பேரின் சடலங்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மகன்களை சந்திக்க வரவில்லை
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர், அதில், அனிஷா பாத்திமா இலங்கையிலிருந்து தமிழகம் வரும்போதெல்லாம் தன் பிள்ளைகளை பார்த்துவிட்டு செல்வார் என எனவும், ஆனால் கடந்த சில வாரங்களாக தமிழகம் வந்தும், பிள்ளைகளை அவர் பார்க்காமல் சென்றுவிட்டதால், ஹபீப்ரகுமான் மிகுந்த மனவேதனையில் இருந்ததாகவும் தெரியவந்தது.
விஷம் கொடுத்து தற்கொலை
இதனால் ஹபீப்ரகுமான், சில நாட்களாக யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்துள்ளார். விரக்தியின் உச்சத்திற்கு சென்ற அவர், கடந்த ஞாயிறு இரவு மகன்கள் இருவருக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, வீட்டில் இருந்த ஹபீப் ரகுமானின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார் தற்கொலைக்கு வேறு காரணம் ஏதேனும் உள்ளதா என்றும் விசாரித்து வருகின்றனர்.