பூவரசம் பூ பூத்தாச்சு.. செங்கோட்டை-கொல்லம் பயணிகள் ரயில் சேவை.. இன்று முதல் கூ கூ!
செங்கோட்டை-கொல்லம் இடையே பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
Recommended Video
செங்கோட்டை: செங்கோட்டை-கொல்லம் இடையே இன்று முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கியது.
நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த செங்கோட்டையிலிருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு மீட்டர் கேஜ் பாதையில் தொடர் வண்டி இயக்கப்பட்டு வந்தது. இந்த பாதையை அகல பாதையாக மாற்ற கடந்த 2010-ஆம் ஆண்டு தொடர்வண்டி சேவை நிறுத்தப்பட்டு அகல பாதை பணிகள் தொடங்கியது. இந்த பணிகள் 8 ஆண்டு நடைபெற்று வந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம் மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து இந்த வழித்தடத்தில் வாரம் இருமுறை தாம்பரம் - கொல்லம் விரைவு தொடர் வண்டி இயக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று செங்கோட்டை - கொல்லம் இடையிலான பயணிகள் தொடர்வண்டி சேவை தொடங்கியது. முதல் நாளான இன்று செங்கோட்டையில் இருந்து சேவை தொடங்கியது. 8 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகள் சேவை தொடங்கியது. இதனால் இரு மாநில எல்லையில் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த ரயிலானது, செங்கோட்டையிலிருந்து காலை 11.25க்கு புறப்பட்டு மாலை 3.40க்கும் கொல்லம் வந்து சேரும் என்றும், கொல்லத்திலிருந்து காலை 10.30-க்கு புறப்படும் ரயில் பகல் 2.35க்கு செங்கோட்டைக்கு வந்து சேரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்கியதால் செங்கோட்டை வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் சார்பில் ரயிலை இயக்கிய ஓட்டுனர்களுக்கும் மற்றும் பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
செங்கோட்டையில் இருந்து கோயமுத்தூருக்கும், திருப்பூருக்கும், பகல் நேரத்தில் தொடர் வண்டியை இயக்க வேண்டும். அதிகமான அதிவிரைவு தொடர்வண்டிகளை இந்த பகுதியில் இருந்து இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.