கடல் அலை 3.5 மீட்டர் உயரம் எழும்பும்.. குமரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
குமரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும், ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.
அதுமட்டுமல்லாமல், வருகிற 20-ந் தேதி வரை ஓரிரு இடங்களில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு அதிகளவில் இருப்பதாகவும் அறிவித்திருந்தது. மேலும் தமிழக கடலோர பகுதிகளில் காற்றின் வேகமும் அதிகமாக இருப்பதால், தென் தமிழக கடல் பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது. குமரி மேற்கு கடற்கரை முதல் கீழக்கரை வரை கடல் அலை உயரமாக எழ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 3 முதல் 3.5 மீட்டர் உயரம் வரை கடலலை எழும்பும் என்றும், காற்றின் வேகம் 65 கி.மீ வரை அதிகரிக்க வாய்ப்பு இருக்கும் என்றும் அறிவித்துள்ளது. அதனால் குமரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.