ஆம்பூர் அருகே தோல் தொழிற்சாலை கழிவுகளால் செத்து மிதக்கும் ஆயிரக்கணக்கான மீன்கள்!
தோல் தொழிற்சாலை கழிவுகளால் ஏரியில் மீன்கள் செத்து மிதக்கின்றன.
ஆம்பூர்: ஆம்பூர் அருகே தோல் தொழிற்சாலை கழிவுகளை ஏரியில் கொட்டியதால் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் குடிநீர் மாசடைந்து இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வேலூர்மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள பெரியவரிகம் ஏரி 350 ஏக்கர் பரப்பளவை கொண்ட ஏரியாகும், இந்த ஏரியினை மக்கள் குடிநீருக்காகவும் கால்நடைகளுக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் பெரியவரிகம் ஆம்பூர் மற்றும் அதன் அருகில் சுற்றியுள்ள தோல் தொழிற்சாலைகளில் இருந்து தோல் மற்றும் கால்நடைகளின் ரோமக்கழிவுகள் ஏரியில் கொட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நீர் முழுவதும் மாசடைந்தது உபயோகத்திற்கே அற்ற நிலையில் உள்ளதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், இன்று தோல் தொழிற்சாலைகளால் மூட்டை மூட்டையாக ஏரியில் தோல் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீர் மாசடைந்து ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக அரசு அதிகாரிகள் இது போன்று குடிநீர் மாசுபடுத்தி ஏரியில் கழிவை கொட்டும் தோல் தொழிற்சாலைகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.