2015ல் சென்னையை மூழ்கடித்த வெள்ளப்பெருக்குக்கு காரணம் என்ன?... சிஏஜி திடுக் தகவல்
2015ஆம் ஆண்டு சென்னையை மூழ்கடித்த வெள்ளப் பெருக்குக்கு மனித தவறே காரணம் என இந்திய கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: 2015ஆம் ஆண்டு சென்னையை மூழ்கடித்த வெள்ளப் பெருக்குக்கு மனித தவறே காரணம் என இந்திய கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வெள்ள மேலாண்மை மற்றும் வெள்ளத்தை எதிர்கொள்வது குறித்த இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 2015-ம் ஆண்டில் சென்னை, புறநகரில் ஏற்பட்ட வெள்ளத்தால் 289 பேர் பலியானதோடு, 23.25 லட்சம் வீடுகள் நீரில் மூழ்கின. அனைத்து வகை போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டு சென்னை நகரம் பல நாட்கள் முடங்கியது.
பாதாள சாக்கடை
கட்டுப்பாடு இல்லாத வகையில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளால் வெள்ள நீரின் எளிதான ஓட்டம் தடைபட்டு, சென்னையை மூழ்கடித்தது. மழைநீர் வடிகாலுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை. பாதாள சாக்கடைத் திட்டங்கள் பல பகுதியில் இல்லை. எனவே மழைநீர் வடிகால் அமைப்பில் கழிவுநீர் கலந்து அதை அடைத்துக்கொள்வது சாதாரண நிகழ்வாக இருந்தது.
ஆக்கிரமிப்பு கட்டடங்கள்
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) இரண்டாவது பெருந்திட்டத்தின் மூலம், நீர்வழிகளை ஒட்டியுள்ள கட்டுமானங்களை முறைப்படுத்துவதற்காக தாழ்வான நிலங்களை வரையறை செய்ய முயற்சிக்கவில்லை. இதனால் ஆற்றின் கரையோரங்களில் பெரிய பெரிய கட்டங்கள் எழுப்பட்டுள்ளன.
மழை நீர் தேங்க காரணம்
வேளாண், நகர்ப்புறம் அல்லாத மற்றும் திறந்தவெளி பொழுதுபோக்கு மண்டலங்களில் இருந்து நில பயன்பாட்டை பிற மண்டலங்களுக்கு மாற்றுவதன் மூலம் கட்டுமானங்களை சி.எம்.டி.ஏ. தாராளமாக அனுமதித்தது. அதுபோன்ற அனுமதியற்ற கட்டுமானங்களும் நீர்நிலைகளைச் சுருக்கி, 2015-ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது பெருமளவு நீர் தேங்க காரணமாக அமைந்தது.
ஆக்கிரமிப்பு அதிகரிப்பு
செம்பரம்பாக்கம் ஏரிக்கு மேல்மடையில் இரண்டு புதிய நீர்த் தேக்கங்களை அரசு உருவாக்கவில்லை. கொசஸ்தலை ஆற்றுக்கு குறுக்கே கூடுதல் நீர் சேமிப்புப் பணி சரியாக திட்டமிடப்படவில்லை. இவற்றால் நீர் சேகரிப்பு மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு நிறைவேறவில்லை. ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் ஏரிகளின் சதவீதம் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே வந்தது.
முன்னறிவிப்பு இல்லை
பருவமழை தொடங்குவதற்கு முன்பு தூர்வாரும் பணியை தொடங்கபடவில்லை. மழைகாலத்துக்கு முன்பே நிதியை ஒதுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. செம்பரம்பாக்கம் ஏரி மிகப் பெரிய ஒன்று. அதன் நீர்த்தேக்கம், நீர்வரத்து பற்றிய அறிவியல் பூர்வமான முன்னறிவிப்பு அமைப்பும், வெள்ளம் பற்றிய முன்னறிவிப்பு அமைப்பும் இருக்கவில்லை. இது மத்திய நீர் ஆணையத்தின் விதிகளுக்கு முரணானது.
முழு கொள்ளளவு
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அவசரகால செயல் திட்டம் இல்லாத நிலையில், நீர்த் தேக்கத்தில் இருந்து வெளியேறிய நீரின் அளவு, வரும் நீரின் அளவைவிட அதிகமாக இருந்ததால், அடையாறில் விடப்பட்ட நீரின் அளவு வரைமுறைப்படுத்தப்படவில்லை. ஏரியின் நீர், முழு கொள்ளளவு மட்டத்துக்கு வைக்கப்படவில்லை.
தனியார் நிலத்துக்கு பாதுகாப்பு
செம்பரம்பாக்கம் கரையை ஒட்டிய பகுதியில் சட்டத்துக்கு முரணாக அனுமதிக்கப்பட்ட தனியார் நிலத்தை நீரில் மூழ்காமல் பாதுகாக்க நீர் ஆதாரத் துறை விரும்பியதால் மொத்த கொள்ளளவான 3.645 டி.எம்.சி.க்கு பதிலாக 3.481 டி.எம்.சி. நீர் மட்டுமே இருப்பில் வைக்கப்பட்டது.
அதிகளவு நீர் வெளியேற்றம்
கூடுதலாக 0.268 டி.எம்.சி. நீரை சேமிக்கும் வாய்ப்பு இருந்ததை பார்க்கும்போது, நீர் வெளியேற்றத்தை 6 மணிநேரத்துக்கு 12 ஆயிரம் கன அடி என்ற அளவில் வைத்திருக்க முடியும். ஆனால் 20 ஆயிரத்து 960 கன அடி முதல் 29 ஆயிரம் கன அடி வரை வெள்ள நீர் வெளியேற்றப்பட்டது.
மனிதனால் உருவாக்கப்பட்ட வெள்ளபெருக்கு
வெள்ள நீர் வெளியேற்றத்தை உயர்த்தாமல் இருந்திருந்தால் 0.266 டி.எம்.சி. கூடுதல் அளவு நீரை நீர்த் தேக்கத்தில் வைத்திருக்க முடியும். அப்போதுகூட, முழுக்கொள்ளளவை எட்டியிருக்காது. வெளியேறும் நீரின் அளவு, வரத்து நீரின் அளவைவிட அதிகமாக இருந்ததால், அந்த வெள்ள சம்பவம் மனிதனால் உருவாக்கப்பட்டதாகவே கருத முடியும்.
வரைமுறையற்றபடி நீரை வெளியேற்றியதன் மூலம் மனிதனாலேயே 2015ஆம் ஆண்டு வெள்ளப் பேரழிவு ஏற்பட்டது. இவ்வாறு இந்திய கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.