தமிழ் இன உணர்வாளர் ஓவியர் வீர சந்தானத்தின் உடல் தகனம்!
மறைந்த ஓவியரும், நடிகருமான வீரசந்தானத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது.
சென்னை: தமிழ் இன உணர்வாளரான ஓவியர் வீரசந்தானத்தின் உடல் சென்னை மயிலாப்பூரில் உள்ள கைலாசபுரம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
ஓவியர் வீரசந்தானம் மாரடைப்பால் சென்னையில் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 70.
கும்பகோணம் அருகே உள்ள உப்பிலியப்பன் கோயிலில் பிறந்த இவர், சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வந்தார். அவருக்கு சாந்தி என்ற மனைவியும், சங்கீதா, சாலிகா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.
மறைந்த வீரசந்தானம் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஓவியத் துறையில் பங்காற்றியவர். ஓவியத் துறையையும் தாண்டி தமிழ் உணர்வாளர், நடிகர் என பல முகங்களை கொண்டவராக திகழ்ந்தார்.
ஆடை வடிவமைப்புத் துறையில் இவர் தேசிய விருது பெற்றுள்ளார். தமிழ் உணர்வாளராக இருந்த இவர், பல்வேறு போராட்டங்களிலும் பங்கேற்றிருக்கிறார்.
சந்தியா ராகம், அவள் பெயர் தமிழரசி, பீட்சா, கத்தி உள்ளிட்ட பல படங்களிலும், குறும்படங்களிலும் நடித்துள்ளார். 'தானே' புயலின்போது சென்னையில் மிகப்பெரிய ஓவியக் கண்காட்சியை நடத்தி நிதி வசூல் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்துள்ளார்.
அவரது இறுதி ஊர்வலம் சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து சென்னை மைலாப்பூர் கைலாசப்புரம் மின்மாயனத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.