சிட்டுக்குருவி கூடு கட்டினால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் - உலக சிட்டுக்குருவிகள் தினம்
வீட்டின் செல்வ செழிப்பை அதிகரிக்க வைத்து தெய்வீக அருளை தரும் சிட்டுக்குருவிகளுக்கு கூடு கட்ட இடம் தரலாம்.
சென்னை: சிட்டுக்குருவிகள் அதிர்ஷ்டத்தை அளிக்கும் பறவைகள். சின்னஞ்சிறிய இந்த பறவைகள் வீடுகளில் கூடு கட்டினால் தெய்வீக அருள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. வீட்டில் சிட்டுக்குருவி கூடு கட்டுவது நல்ல சகுனம் என்று சொல்வார்கள்.
புதியதாக திருமணமானவர்கள் குடியிருக்கும் வீட்டில் சிட்டு குருவி கூடு கட்டினால், இந்த வீட்டில் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையும் இருந்தது. இப்போதய நகர வாழ்க்கையில் சிட்டுக்குருவிகளை பார்ப்பதே அரிதாகி வருகிறது.
சின்னஞ்சிறியப் பறவையான சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை விவசாய நாடான இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே குறைந்து வருகிறது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கடந்த 2010-ம் ஆண்டு முதல் மார்ச் 20ஆம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
உலக சிட்டுக்குருவிகள் தினம்
வீட்டின் முற்றத்திலும், வாசல்களிலும் சுதந்திரமாக வந்து தானியங்களை கொத்தித்தின்ற பறவையான சிட்டுக்குருவி இனி பாடப் புத்தகத்திலும், படங்களிலும் மட்டுமே இடம்பெறும் நிலைக்கு வந்துள்ளது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதை உணர்ந்த டெல்லி அரசு சிட்டுக்குருவியை மாநிலப் பறவையாக அறிவித்துள்ளது.
மாயமான சிட்டுக்குருவிகள்
இன்று நகரங்களில் மட்டுமல்ல, சில கிராமங்களிலும் பறவைகளைப் பார்ப்பது அரிதிலும் அரிதாகி விட்டது. அப்படித் தான் சிட்டுக் குருவில் உலகளவில் அழிந்து அரிய வகை பறவை இனங்களில் சேர்ந்து விட்டது. 1994-ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், லண்டனில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை 75 சதவிகிதம் சரிவடைந்துள்ளதாக கூறுகின்றனர்.
செல்லப்பறவை
சிட்டுக்குருவியின் மொத்த வாழ்நாள் 13 ஆண்டுகள் ஆகும். இவை பெரும்பாலும் வனப்பகுதிகளில் வாழ்வதை விட மனிதர்களுடன் நெருங்கி இருக்கவே விரும்பும். செல்போன் கோபுரங்களால் சிட்டுக்குருவி இனம் அழிந்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், அது உண்மையில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
அடுக்குமாடி குடியிருப்புகள்
சிட்டுக்குருவிகள் பொதுவாக வீட்டு மாடம், பரண், ஓடுகளின் இடைவெளி போன்ற இடங்களில் கூடுகட்டி வசித்து வந்தன. இப்போது கான்கிரீட் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகரிப்பால் இன்று நகரங்களில் இருந்து விடைபெறத் தொடங்கிவிட்டன.
இயற்கை விவசாயம்
சிட்டுக்குருவிகள் விரும்பி உண்ணும் கம்பு, கேழ்வரகு, சோளம், திணை, சாமை போன்ற சிறுதானியங்களின் பயன்பாடு குறைந்துவிட்டதும், நெல் பயிரிடுதலில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டதும் சில முக்கியக் காரணங்களாக கூறப்படுகிறது. இயற்கை முறை விவசாயத்தை ஊக்கப்படுத்துவது குருவிகளுக்கு மட்டுமில்லாமல் மனிதர்களுக்கும் நன்மையை ஏற்படுத்தும் என்று இயற்கை வேளாண் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சிட்டுக்குருவிகளுக்கு அடைக்கலம்
வீடுகளில் சிட்டுக்குருவிகள் தங்கும் வகையில் கூடுகளை அமைத்து, அந்த இனத்தை அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்ற வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். வீட்டில் சிறிய அட்டைப் பெட்டியில் வைக்கோலை அடைத்து வைத்து, வீட்டு வராந்தாவிலோ, பால்கனியிலோ அல்லது மரத்திலோ தொங்க விட்டால் கூட சிட்டுக்குருவிகளுக்குப் போதுமானது என்கிறார்கள் பறவை ஆர்வலர்கள்.
கூடுகளை கலைக்க வேண்டாம்
வீட்டில் சிட்டுக்குருவி, புறா, அணில் போன்றவை கூடு கட்சி வசிப்பது தெய்வீக அருளை அதிகரிக்கச் செய்யுமாம். வீட்டு திண்ணையில் வாசலில் தானியங்களை பரப்பி வைத்தால் அவற்றை சாப்பிட வரும் பறவைகள் கூடு கட்டி குஞ்சு பொறித்து வசிக்கும் இது அந்த வீட்டின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்குமாம். இதனால் நன்மையே நடக்கும் என்பதால் இந்த பறவைகளின் கூடுகளை கலைக்கக் கூடாது.