விவசாயிகளுக்காக போராடினால் நக்சல் என தமிழக அரசு சொல்வதா? பியூஷ் மனுஸ் சகோதரி கேள்வி
பியூஸ் மனுஷ் சகோதரி தமிழக அரசு மற்றும் காவல்துறை மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
Recommended Video
கோவையில் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஸ் சகோதரி ஊர்வசி் லுனியா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-
நேற்று முன்தினம் இரவு பியூஸ்மனுஷ் கைது செய்யப்பட்டது குறித்து குடும்பத்தினருக்கு காவல் துறையினர் முறையான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. பியூஸ் மனுஷை கடத்தி சென்றது போல அவரை அழைத்து சென்று கைது செய்துள்ளனர்.\
கைது செய்யப்பட்ட பின்னர் வழக்கறிஞர்கள் அவரை சந்திக்கவும் காவல் துறை அனுமதிக்கவில்லை. பியூஸ் மனுஷ் செல்போனை இதுவரை காவல் துறையினரே வைத்துள்ளனர். செல்போனை தங்களிடம் போலீசார் கொடுக்க மறுக்கின்றனர்.
சேலம் - சென்னை சாலை குறித்து தனது கருத்தை பியூஷ் சொல்கின்றார். அவர் மக்களை தூண்டிவிடவில்லை. தண்ணீர், நிலம், சுத்தமான காற்று மற்றும் விவசாயிகளுக்காக போராடினால், குரல் கொடுத்தால் அவர்களை மாவோயிஸ்ட், நக்சல் என தமிழக அரசு சொல்லுமா?
8 வழிச்சாலை குறித்து முழுமையாக ஆய்வுகள் செய்யப்படவில்லை. இதை கேள்வி எழுப்பியதால் பியூஸ்மனுஷ் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். பியூஸ் மனுஷ் மீது போலியான குற்றச்சாட்டுகளை முன் வைத்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல் துறை முயல்கின்றது.
அதிகாரத்தில் இருப்பவர்களை பாதுகாப்பது மட்டும் காவல் துறையின் பணியா? மக்களுக்கு அவர்களின் உரிமைகளை சொல்லிக்கொடுப்பதும், அறியாமையை போக்குவதும் போராட்டத்தை தூண்டுவதா? பியூஸ்மனுஷ் கைது சம்பவத்தில் அரசு, காவல் துறை இரண்டுமே சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றன. உண்மையை அரசுக்கு எடுத்து உணர்த்தினால் கைது செய்வது என்பது சரியான நடவடிக்கை அல்ல.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் அவருடன், தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயலாளர் சிவஞானம், சமூக ஆர்வலர் சிவா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது தமிழகம் தழுவிய அளவில் அனைத்து சுற்றுசுழல் ஆர்வலர்களையும் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்த உள்ளதாகவும், சேலம் சென்னை சாலையால் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன எனவும் அவர்கள் தெரிவித்தனர்.